புதுக்கோட்டை அருகே மணமேல்குடி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த பெண் சப் இன்ஸ்பெக்டர் லட்சுமி பிரியா, தனது யூனிபார்மை அயர்ன் செய்யும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன்தினம் காலை, பணிக்கு செல்வதற்காக தயாராகிக் கொண்டிருக்கும் போது இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி காவல் நிலையத்தில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் லட்சுமி பிரியா (வயது 30). இவரது சொந்த ஊர் அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி ஆகும். இவரது கணவர் சக்திமுருகன் தா. பழூரில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த தம்பதிக்கு 4 வயதில் மகனும், 3 வயதில் மகளும் இருக்கின்றனர். இருவரும் பொன்பரப்பி பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரிந்து வந்த லட்சுமி பிரியா, கடந்த ஏப்ரல் மாதம் தான் மணமேல்குடி காவல் நிலையத்திற்கு பணியமர்த்தப்பட்டார்.
இதன் காரணமாக மணமேல்குடி வடக்கூர் பகுதியில் வாடகை வீடு எடுத்து அங்கு தங்கி வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று காலை 8 மணி ஆகியும் லட்சுமி பிரியா காவல் நிலையத்திற்கு பணிக்கு வரவில்லை. செல்போனில் தொடர்புகொண்ட போதும் அவர் எடுக்கவில்லை. இதனால் சக போலீசார் அவரது வீட்டுக்குச் சென்று பார்த்தனர்.
வீட்டின் கதவை தட்டி பார்த்தனர். ஆனால் அவர் திறக்கவில்லை, நீண்ட நேரம் ஆகியும் எந்த பதிலும் கூறவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சக போலீசார் கதவை உடைத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது லட்சுமி பிரியா அங்கு இறந்த நிலையில் கிடந்தார். இதைப் பார்த்து சக போலீசார் அதிர்ச்சியடைந்தனர். உடனே உயர் அதிகாரிகளுக்கு இது பற்றி தகவல் கொடுத்தனர.
அதன்பேரில் கோட்டைப்பட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு காயத்ரி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, லட்சுமி பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எப்படி உயிரிழந்தார் என்பது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாவது:-
பணிக்கு வருவதற்காக நேற்று முன்தினம் காலை லட்சுமி பிரியா தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது யூனிபார்மை அயர்ன் பாக்ஸில் அயர்ன் செய்துள்ளார். அதில் மின்கசிவு ஏற்பட்டதால் அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.
இது குறித்து மணமேல்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மின்சாரம் பாய்ந்து பெண் சப் இன்ஸ்பெக்டர் பலியான சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.