திருச்சி: தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் மு.மணிகண்டன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :-
தினந்தோறும் சூரியன் நமக்கு மேல் உச்சியில் செல்வது போல தெரிந்தாலும், ஆண்டுக்கு 2 நாட்கள் மட்டுமே மிகச் சரியாக உச்சியில் வரும்.
அப்போது, ஒரு பொருளின் மேல் விழும் சூரிய வெளிச் சத்தின் விளைவாக, நிழல் அப்பொருளின் பரப்புக்குள்ளேயே விழுவதால் அதன் நிழலை நாம் பார்க்க முடியாது. இந்நிகழ்வு ஓரிரு நிமிடங்கள் மட்டுமே நடைபெறும்.
இந்த நாட்கள், நிழல் இல்லா நாள் அல்லது பூஜ்ய நிழல் நாள் என்றழைக்கப்படுகிறது. இதன்படி, நிகழாண்டு திருச்சி மாவட்டத்தில் ஏப்.17ம் தேதி திருச்சி, மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி, மணிகண்டம், திருவெறும்பூர், துவாக்குடி பகுதிகளிலும், ஏப்.18ம் தேதி புள்ளம்பாடி, லால்குடி, மண்ணச்சநல்லூர், ஸ்ரீரங்கம், பேட்டைவாய்த்தலை, முசிறி, தா.பேட்டை, தொட்டியம் பகுதிகளிலும், ஏப்.19ம் தேதி துறையூர், உப்பிலியபுரம் பகுதிகளிலும் நிழல் இல்லா நாள் அமைகிறது.
இந்த எளிய வானியல் நிகழ்வை அவரவர் வீடுகளிலேயே செய்து பார்க்கலாம். உரிய நேரத்தில் சம தளத்தில் ஏதேனும் ஒரு உருளையான பொருளை செங்குத்தாக வைத்து, அதன் நிழல் வெளிப்பக்கம் விழுகிறதா அல்லது நிழல் விழவில்லையா என்பதை செய்து பார்க்கலாம். உங்கள் ஊரில் எப்போது நிழல் இல்லா நேரம் என்பதை அறிய https://alokm.com/zsd.html என்ற இணைப்பில் சென்று, உங்களது ஊர்ப் பெயரை தட்டச்சு செய்தால் உரிய நேர விவரங்கள் கிடைக்கும் என தெரிவித்துள்ளார் .

