திருச்சி அருகே 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்த ஆம்னி பஸ்.தீ பிடித்ததால் அலறிய பயணிகள். 15 பேர் காயம், மூதாட்டி உயிரிழப்பு .
திருச்சி அருகே தென் மாவட்டம் சென்ற ஆம்னி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விழுந்ததில் ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்தது.
இதனால் பஸ்சுக்குள் சிக்கி தவித்த பயணிகள் பஸ்சின் கண்ணாடியை உடைத்து வெளியேறினர். இந்த பஸ் விபத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. விபத்தில் பெண் பலி.15 பயணிகள் காயம் அடைந்துள்ளனர்.
சென்னையில் இருந்து கோவை, திருச்சி, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி என பல்வேறு ஊர்களுக்கும் தினமும் தனியார் ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் வசிக்கும் வெளியூர் மக்கள் விடுமுறை மற்றும் திருமணம் போன்ற விசேஷ நாட்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இதனால், சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் ஆம்னி பஸ்களில் பயணிகள் கூட்டம் எப்போதும் அலைமோதுவதை காண முடிகிறது. சென்னையில் இருந்து செல்லும் ஆம்னி பஸ்கள் சிறிய கிராமங்கள் வழியாகவும் செல்கின்றன. இதனால், வெளியூர்களில் இருந்து செல்லும் பயணிகள் தங்கள் சொந்த ஊருக்கு அதிகாலையில் சென்றுவிடலாம் என்பதால் தனியார் ஆம்னி பஸ்களை அதிகம் விரும்புவதை பார்க்க முடிகிறது.
இந்த நிலையில் தான் நேற்று சென்னையில் இருந்து மார்த்தாண்டத்திற்கு தனியார் ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை நாகர்கோயில் சேர்ந்த ராஜா என்பவர் ஒட்டி வந்தார் .
இந்த நிலையில் நள்ளிரவு திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் யாகாபுரம் ஒத்தக்கடை அருகே சென்று கொண்டிருந்தது. திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பஸ் கவிழ்ந்த வேகத்தில் தீ பிடித்தது. இதனால் பஸ்சுக்குள் இருந்த பயணிகள் உயிருக்கு அஞ்சி அலறினர்.

ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு பயணிகள் அவசர அவசரமாக வெளியே குதித்தனர் எனினும், பயணிகள் 15 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது. காயம் அடைந்த பயணிகள் அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக துவரங்குறிச்சி, மணப்பாறை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் .
பேருந்து விபத்துக்குள்ளானதை பார்த்த அக்கம் பக்கத்தினரும் நள்ளிரவு நேரத்திலும் துரிதமாக வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
மின் ஒயர்கள் பேருந்து மீது அறுந்து விழுந்ததில் பேருந்து மளமளவென தீ பற்றி எரிய தொடங்கியது . தகவல் அறியும் சம்பவ இடத்திற்கு வந்த துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர் .
இந்த விபத்தில் பேருந்து முழுமையாக எரிந்து நாசமானது .
இந்த விபத்தில் படுகாயத்துடன் மீட்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டம் நெடுவிலையை சேர்ந்த புஷ்பம் (வயது 62) சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார் .
இந்த விபத்து தொடர்பாக துவரங்குறிச்சி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
பஸ்சின் டிரைவர் தூங்கியதால் விபத்து ஏற்பட்டதா? அல்லது அதிவேகத்தில் பஸ்சை இயக்கினாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். திருச்சி சென்னை நெடுஞ்சாலையில் நள்ளிரவு ஏற்பட்ட இந்த பயங்கர விபத்தால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்படது.