திருமணம் செய்வதாக கூறி இளம் பெண்ணுடன் பலமுறை உடலுறவு கொண்டு ஏமாற்றிய திமுக நகர செயலாளர் மீது வழக்கு பதிவு .
தூத்துக்குடியில், தனது கடையில் வேலை பார்க்கும் பெண்ணிடம் திருமண ஆசை காட்டி உறவு கொண்டதாக திமுக பிரமுகர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி அருகேயுள்ள சாயர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் திமுக நகரச் செயலாளராக உள்ளார். அதுமட்டுமின்றி, அப்பகுதியில் ஒரு கடையும், இ-சேவை மையமும் நடத்தி வருகிறார். இந்தக் கடையில், அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 34 வயதான பெண் வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 2019ஆம் ஆண்டு இவரது கணவர் இறந்த நிலையில், குழந்தையுடன் பெற்றோர் பராமரிப்பில் அப்பெண் வசித்து வருகிறார். இதனிடையே, கண்ணன், அப்பெண்ணுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக நெருங்கிப் பழகியதாக கூறப்படுகிறது. மேலும், திருமணம் செய்து கொள்வதாகக் கூறிய கண்ணன், அப்பெண்ணுடன் பல முறை உறவு வைத்துள்ளார்.
இந்த நிலையில், திடீரென கண்ணன், தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து அப்பெண்ணை மிரட்டியது மட்டுமல்லாமல், திருமணம் செய்யவும் மறுப்பு தெரிவித்துள்ளார். எனவே, இது குறித்து ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அப்பெண் புகார் அளித்தார்.
ஆனால், போலீசார் நடவடிக்கை எடுக்காமல் தாமதித்து வந்ததாக அப்பெண் கூறும் நிலையில், 3 லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு போலீசில் புகார் அளிக்காமல் சென்று விட வேண்டும் என கண்ணன் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, இது குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜானிடம் அப்பெண் நேரில் மனு அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில், ஏமாற்றுதல், திருமணம் செய்து கொள்வதாக கூறி உடலுறவு கொள்ளுதல், மிரட்டல் விடுத்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கண்ணன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.