Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கோட்டை காவல் நிலையம் அருகே சாக்கு மூட்டையில் மூதாட்டியின் பிணம் . நகைக்காக கொன்ற பிரபல துணிக்கடையில் பணியாற்றும் தொழிலாளி கைது .

0

'- Advertisement -

 

திருச்சி கோட்டை காவல் நிலையம் அருகே ரயில்வே ஊழியரின் தாய் நகைக்காக அடித்துக் கொலை.

ஜவுளிக்கடை ஊழியர் கைது -நகை பறிமுதல்


திருச்சி சூப்பர் பஜாரில் ரயில்வே ஊழியரின் தாய் நகைக்காக கொலை செய்யப்பட்டு, உடலை சாக்கில் வைத்து சுருட்டி குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் ஜவுளிக்கடை ஊழியரை கைது செய்து போலீசார் நகையை பறிமுதல் செய்தனர்.

திருச்சி கோட்டை, சூப்பர் பஜார் பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில், நேற்று (திங்கள்கிழமை) காலை குப்பைகளை சேகரிக்கச் சென்றபோது, சந்தேகத்துக்கிடமான வகையில் சாக்கில் வைத்து சுருட்டிய மர்ம பொருள் கிடந்துள்ளது. அதை தூய்மை தொழிலாளர்கள் பிரித்துப் பார்த்தபோது உள்ளே மூதாட்டி ஒருவரின் உடல் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் போலீசார் நிகழ்விடம் வந்து சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
நேற்று முன்தினம் திருச்சி கோட்டை பகுதிக்கு வந்த, மண்ணச்சநல்லூர் வட்டம் திருவாசியைச் சேர்ந்த கல்யாணி (வயது 72) என்ற மூதாட்டி மாயமானதாக போலீசாருக்கு புகார் வந்திருந்தது. அதன் பேரில் உறவினர்களை அழைத்து விசாரணை மேற்கொண்டதில், இறந்து கிடந்தது கல்யாணிதான் என தெரியவந்தது.

இதனையடுத்து உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முதல் கட்ட விசாரணையில், மூதாட்டி கல்யாணி குடும்ப ஓய்வூதியத் தொகை வந்ததும் அதை எடுத்துக்கொண்டு, கோட்டை பகுதிக்கு வந்து பொருட்கள் வாங்கிச் செல்வது வழக்கமாம்.

அந்த வகையில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) காலை வந்தவர் மாலையாகியும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவரது மகன் வனத்தான் (வாளாடி ரயில் நிலைய ஊழியர்) மற்றும் உறவினர்கள் தேடியுள்ளனர். கோட்டை காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் கோட்டை பகுதிக்கு வந்த மூதாட்டி மர்ம நபர்களிடம் சிக்கியுள்ளார். அவரிடமிருந்த தொகை, அணிந்திருந்த தோடு, மூக்குத்தி உள்ளிட்டவைகளையும் காணவில்லை. எனவே பணம், நகைக்காக மர்ம நபர்கள் மூதாட்டியை கொன்று சாக்கு மூட்டையில் வைத்து சுருட்டி குப்பைத் தொட்டியில் வீசியிருக்கலாம் என போலீசார் சந்தேகித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் சூப்பர் பஜார் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.இதில் அப்பகுதியில் உள்ள பிரபலமான ரெடிமேட் ஜவுளி கடை ஒன்றில் பணி புரியும் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தைச் சேர்ந்த அப்துல் காசன் (வயது 54) என்பவர் மூதாட்டியை கொலை செய்து அவர் காதில் அணிந்திருந்த ஒரு பவுன் தங்க தோடுகளை திருடிச் சென்றதும்,
மூதாட்டியை அடித்துக்கொண்டு அவரது உடலை அங்கிருந்த வெள்ளை சாக்குப்பையில் போட்டு கட்டி குப்பை கிடக்கில் வீசியதும் சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் தெரியவந்தது.
இதை அடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி குற்றவாளி அப்துல் கசனை கைது செய்தனர்.

அவர் போலீசில் நகைக்காக மூதாட்டியை கொன்று சாக்கு பையில் கட்டி குப்பைத்தொட்டியில் வீசியதை ஒப்புக்கொண்டார். இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இதை அடுத்து குற்றவாளி அப்துல் கஸன் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.