மனிதநேய மக்கள் கட்சி
சார்பில் சாலை மறியல்.
திருச்சியில் மனித நேய மக்கள் கட்சி கொடி அகற்றப்பட்டதை கண்டித்து அக்கட்சியினர் நேற்று இரவு சாலை மறியல் போராட்டம் மேற்கொண்டனர்.
மனிதநேய மக்கள் கட்சியின் 15 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு, மமக கட்சி மேற்கு மாவட்ட தலைவரும், 28 ஆவது வார்டு கவுன்சிலருமான பைஸ் அகமது தலைமையில் திருச்சியில் 15 இடங்களில் கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. அந்த வகையில் மனித நேய மக்கள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் இப்ராஹிம் தலைமையில் திருச்சி உறையூர் 24 ஆவது வார்டு குறத்தெரு பகுதியிலும், 10 ஆவது வார்டு தாக்கர் ரோடு பகுதியிலும் 11 ஆவது வார்டு ஜெயந்தி விடுதி பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட 3 இடங்களில் மனிதநேய மக்கள் கட்சி கொடி ஏற்றப்பட்டது.
இந்நிலையில் திங்கள்கிழமை காலை இப்பகுதிகளில் ஏற்றப்பட்ட கட்சி கொடிகளை கம்பத்துடன் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அகற்றப்பட்டது.
எனவே மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் இப்ராஹிம், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக கிழக்கு மாவட்ட தலைவர் ராஜா ஆகியோர் தலைமையில் 100 க்கும் மேற்பட்டோர், நேற்று இரவு உறையூர் காவல் நிலைய சாலையில் இருந்து பேரணியாக நடந்து சென்ற உறையூர் குறத்தெரு மெயின் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த கண்டோன்மென்ட் காவல் உதவி ஆணையர் கென்னடி, தில்லை நகர் உதவி ஆணையர் ராஜூ மற்றும் உறையூர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜா ஆகியோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.