திருச்சியில் மாணவர்களுக்காக கட்டணமில்லா நகர பேருந்துகளை அமைச்சர்கள் மகேஷ் பொய்யாமொழி , சிவசங்கர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்
ஸ்மார்ட் மீட்டர் நடைமுறைக்கு வரும் பொழுது
மாதம் ஒருமுறை மின் கணக்கீடு செய்யும் முறை நடைமுறைக்கு வரும்.
திருச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேட்டி:
திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் ( லிட் )திருச்சி மண்டலம் சார்பில் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பள்ளி மாணவர்கள் அதிகம் பயணிக்கும் காலை மற்றும் மாலை பள்ளி நேரங்களில் மாணாக்கர்கள் மட்டும் எளிதாக பயணம் செய்யும் வகையில் கட்டணமில்லா நகர பேருந்துகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி சிவசங்கர் , பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் இன்று அண்ணா நகர், திருவெறும்பூர் பேருந்து நிலையம், காட்டூர் பேருந்து நிலையம், பால்பண்ணை நால்ரோடு பேருந்து நிறுத்தம், ஆகிய இடங்களில் நான்கு பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட கலெக்டர்
வே. சரவணன்,திருச்சி மாநகராட்சி மண்டல குழு தலைவர்
மு.மதிவாணன் , தலைமை செயற்குழு உறுப்பினர்
கே என் சேகரன் ஒன்றிய செயலாளர் கங்காதரன், பகுதிச் செயலாளர்கள் நீலமேகம், சிவக்குமார். ஏ.எம்.ஜி.விஜயகுமார், புதுக்கோட்டை மண்டல பொது மேலாளர் முகமது நாசர் , மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா , மற்றும் போக்குவரத்து கழக பணியாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பள்ளி மாணவர்களுக்கு தேவையான பேருந்து வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.
பள்ளி கல்லூரிகளுக்கு மாணவர்களின் சேர்க்கையை பொறுத்து பேருந்துகள் இயக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் ஆகிய திட்டங்களால் கல்லூரிகளில் மாணவ, மாணவிகளின் சேர்க்கை அதிகரித்துள்ளது. அதற்கு ஏற்ப பேருந்து வசதிகளை செய்து வருகிறோம்.
பள்ளி மாணவர்களுக்காகவும் சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தொடர்ந்து கோரிக்கை வைத்தார். அதற்கான ஆய்வுகள் செய்யப்பட்டு கடந்த மாதம் சென்னையில் பள்ளி மாணவர்களுக்கான பிரத்தியேக பேருந்து சேவை தொடங்கப்பட்டது. சென்னையில் உள்ள 25 பள்ளிகளுக்கு 50 நடைகள் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் இந்த திட்டத்தை விரிவுப்படுத்தப்பட வேண்டும் என்கிற அடிப்படையில் இன்று திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட அண்ணா நகர் பகுதியில் இந்த சேவை தொடங்கப்படுகிறது மற்றும் காலையில் பள்ளி திறக்கும் நேரத்தில் மாணவர்களை அழைத்துச் செல்லும் இந்த பேருந்து மாலை பள்ளி முடிந்த பின்பு மீண்டும் அழைத்து வரும். மற்ற நேரங்களில் வழக்கமான நடைகளில் இயக்கப்படும்.
தொடர்ந்து இது ஆய்வு செய்யப்பட்டு ஒவ்வொரு தொகுதியாக விரிவாக்கம் செய்யப்படும்.
ஸ்மார்ட் மீட்டர் நடைமுறைக்கு வரும் பொழுது மாதம் ஒருமுறை மின் கணக்கீடு செய்யும் முறை நடைமுறைக்கு வரும்.
இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

