திருச்சி சிறப்பு முகாமில் இருந்து வெளிநாட்டு கைதிகள் கதவை உடைத்து தப்பிக்க முயற்சி. கலெக்டர், கமிஷனர் நேரில் விசாரணை .
திருச்சி சிறப்பு முகாமில் இருந்து வெளிநாட்டு கைதிகள் கதவை உடைத்து தப்பிக்க முயற்சி. கலெக்டர், கமிஷனர் நேரில் விசாரணை .
11 பேர் மீது வழக்குப் பதிவு. 2 வது நாளாக கைதிகள் தகராறு
திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய வெளிநாட்டினரை அடைத்து வைக்க சிறப்பு முகாம் அமைந்துள்ளது. அங்கு சட்டவிரோதமாக நம்நாட்டிற்குள் குடியேறியவர்கள், விசா காலம் முடிந்த பின்னரும் இந்தியாவில் தங்கியிருந்தவர்கள், போலிபாஸ்போர்ட் வைத்திருத்தல், போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்தல் உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் நூறுக்கும் மேற்பட்ட வெளிநாட்டவர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன் தினம் 4 கைதிகள் திடீரென்று மோதிக்கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து கேகே நகர் போலீசார் வழக்கு பதிவு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த பரபரப்பு சம்பவம் அடங்குவதற்குள் நேற்று இரவு அங்கு அடைக்கப்பட்டிருந்த கைதிகளுக்கு இடையே திருச்சி சிறப்பு முகாமிற்குள்ளே மீண்டும் மோதல் சண்டை ஏற்பட்டது. அப்போது ஒருசில கைதிகள் தங்களை விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தி, சிறப்பு முகாம் கதவுகளை உடைத்து சேதப்படுத்தினர்.
இந்நிலையில், அங்கு நேரில் சென்ற மாவட்ட கலெக்டர் சரவணன் மற்றும் மாநகர காவல் ஆணையர் காமினி ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீஸார், முகாம் கதவுகளை உடைத்து தப்பித்து வெளியே ஓட முயன்ற நைஜீரியா நாட்டை சேர்ந்த இக் ஒஜர் இபுகா பிரான்சிஸ்(வயது30), ஒயிடிலே பீட்டர் (வயது42), ஒலிடே யூசுப் (வயது30), ஒக்புஜேம்ஸ் (வயது27), ஏ.ஜெ.ஜான்.(வயது39), காலின் ஆண்டே, எப் பிங் எத்தின், காட்வின் சக்குவா, ஒசாலியாலோ சிலாகி ஜான், கானா நாட்டை சேர்ந்த ஜான், சூடானை காதர் அபுதாஹிர் சுலைமார் ஆகியோர் 11 பேர் மீது திருச்சி மாநகர கே.கே.நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்கதையாகி வருவதை தொடர்ந்து திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் உள்ள பிரச்சனைக்கு உள்ள கைதிகளை சென்னை புழல் சிறைக்கு மாற்ற போலீசார் ஏற்பாடு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

