கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்:
சிபிஐ விசாரணையில் அந்த சம்பவம் திட்டமிட்டு நடந்ததா இல்லையா? என்பது தெரியும்
த.வெ.க பொதுக்குழுவில்
வைத்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் பல்வேறு பகுதிகளில் திமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது. திருச்சி மாநகரம் 12 வது வார்டு வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி கூட்டத்தில் திமுக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளி கல்வி துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:-
பி.எல்.ஏ 2 என்பவர்கள் எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பிற்கு பி.எல்.ஓக்களுக்கு உதவியாக தான் செல்கிறார்கள். பி.எல்.ஏக்கள் மக்களை இன்புளுயன்ஸ் செய்வதில்லை, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் தான் எஸ் ஐ ஆர் ஐ ஆதரிக்கிறார்கள், நாங்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் அதனால் எஸ் ஐ ஆர் நேர்மையாக நடக்க வேண்டும் என விரும்புகிறோம்.
புதிய பாடத்திட்டத்தை வகுக்க 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. போட்டித் தேர்வுக்கு தயாராவது, அறிவியல், தொழில்நுட்ப அறிவை வளர்ப்பது உள்ளிட்டவற்றை மையப்படுத்தி புதிய பாடத்திட்டம் உருவாக்கப்படும்.
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்கள் விசாரணையில் அந்த சம்பவம் திட்டமிட்டு நடந்ததா இல்லையா என்பது தெரியும்.
புதிதாக 13 பள்ளிகள் தொடங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வரும் கல்வி ஆண்டு முதல் மாணவர் சேர்க்கையை தொடங்க வலியுறுத்தியுள்ளோம். அந்தந்த பகுதியில் இருக்கும் மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் பள்ளிகள் செயல்படும் பின்னர் புதிதாக பள்ளி கட்டடங்கள் கட்டப்படும்.
பள்ளிகளின் நுழைவாயிலில் சிசிடிவி அமைப்பதற்கு விரைவில் டெண்டர் விடப்படும்.
மேல்நிலைப் பள்ளிகளில் அக்கவுண்டன்சி தேர்வின் போது கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என ஆசிரியர்களும் மாணவர்களும் கோரிக்கை வைத்தனர். அவர்கள் கோரிக்கைக்கு ஏற்ப கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது .
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
பேட்டியின் போது மாநகரச் செயலாளர் மதிவாணன், கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

