தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று காலை 9 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகிறார் . திருச்சியில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அங்கிருந்து கார் மூலமாக திருவாரூர் செல்கிறார்.
இன்றும், நாளையும் என 2 நாட்கள் திருவாரூர் மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் களஆய்வு பணியை மேற்கொள்ள இருக்கிறார்.
திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக திருவாரூர் சென்றடையும் முதல்வர் ஸ்டாலின், அங்குள்ள கலைஞர். கோட்டத்தில் சிறிது நேரம் ஓய்வு எடுத்த பின்னர், இன்று மாலை காட்டூர் சென்று, அங்கு அவருடைய பாட்டி அஞ்சுகம் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்.
திருவாரூர் ரயில் நிலையம் ரவுண்டானா அருகே அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையையும் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
அவர் ‘ரோடு ஷோ’ மூலம் சாலையில் நடந்து சென்று திமுகவினர், பொதுமக்களின் வரவேற்பை ஏற்கிறார். இன்றிரவு திருவாரூரில் தங்குகிறார். நாளை ஜூலை 10ம் தேதி வியாழக்கிழமை காலை திருவாரூர் பேருந்து நிலையம் அருகே நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு முடிவுற்ற பணிகளை தொடங்கி வைக்கிறார்.
புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். இந்த விழா முடிவடைந்ததும், முதல்வர் ஸ்டாலின் திருவாரூரில் இருந்து சாலை மார்க்கமாக திருச்சி விமான நிலையம் வந்தடைந்து பின்னர் சென்னை திரும்புகிறார்.