திண்டுக்கல் அருகே வாலிபர் கொலை வழக்கில் அண்ணி உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
திண்டுக்கல் அருகே சென்னமநாயக்கன்பட்டி பகுதியில் கணேசன் என்பவருக்கு சொந்தமான கிணறு உள்ளது.
.கடந்த ஜூன் 15ல் அந்த கிணற்றில் கை, கால், வாய் துணியால் கட்டப்பட்டு ஒரு ஆண் சடலம் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தாடிக்கொம்பு போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் ஜிஹெச்சிற்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் கொலையாகி கிடந்தவர், திண்டுக்கல் பூத்தாம்பட்டியை சேர்ந்த சலூன் கடைக்காரர் ஜோதிமணி ( வயது 35) என்பது தெரியவந்தது.
சந்தேகத்தின் பேரில் பூத்தாம்பட்டி கோமதி ( வயது 33), கோனூர் நடராஜன் ( வயது 48), அவரது மனைவி நீலா ( வயது 45) ஆகியோரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: வேடசந்தூர் கிழக்கு மாத்தினிபட்டியை சேர்ந்தவர் முருகன் ( வயது 48). ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். மனைவி கோமதி, 3 குழந்தைகளுடன் பூத்தாம்பட்டியில் வசித்து வந்தார். முருகனின் 2வது சகோதரர் ஜோதிமணி ( வயது 35). இவர் முருகனின் மனைவி கோமதி, குழந்தைகளுக்கு பாதுகாப்பாகவும், உதவியாகவும் இருந்து வந்துள்ளார். அப்போது கோமதிக்கு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனை கோமதி பெற்றோரான நடராஜன் ( வயது 55), நீலா ( வயது 50), தங்கை கணவர் ஸ்டாலின் ( வயது 30) ஆகியோரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து, ஸ்டாலின் தனது நண்பர்களான ஆரோக்கியசாமி ( வயது 28), குட்டி முத்து ( வயது 20) ஆகியோரை கூட்டு சேர்த்து கொண்டார். இவர்கள் திட்டப்படி கோமதி, ஜூன் 11ம் தேதி இரவு ஜோதிமணிக்கு உளுந்தங்களியில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து உள்ளார். ஆனால் ஜோதிமணி தூங்காமல் இருக்கவே மீண்டும் காபியில் 15க்கும் மேற்பட்ட தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து உள்ளார். இதனால் மயக்க நிலைக்கு சென்ற ஜோதிமணியை, ஒரு டூவீலரில் இடையில் அமர வைத்து ஆரோக்கியசாமி, குட்டி முத்து அழைத்து சென்றனர். சம்பவ இடத்தில் கிணற்றில் கை, கால், வாயை கட்டி வீசி சென்றதும் ஜோதிமணி மூச்சுத்திணறி இறந்துள்ளார். இவ்வாறு கூறினார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து 2 பெண்கள் உள்பட 6 பேரையும் கைது செய்தனர்.