திருச்சி உறையூரில் எம்ஜிஆர் தனது பெயரில் வாங்கிய ரூ. 25 கோடி மதிப்புள்ள சொத்துக்கு உரிமை கோரும் அண்ணன் மகன்கள்
திருச்சி உறையூரில்
எம்ஜிஆர் தனது பெயரில் வாங்கிய தற்போது ரூ. 25 கோடி மதிப்புள்ள சொத்துக்கு உரிமை கோரும் அண்ணன் மகன்கள்
கலெக்டரிடம் இன்று புகார் மனு
திருச்சி வடக்கு காட்டூர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் சார்லஸ். ஓய்வு பெற்ற சர்வேயர் இவர் இன்று திருச்சி கலெக்டர் பிரதீப் குமாரிடம் ஒரு புகார் மனு அளித்தார் அதில் அவர் கூறியிருப்பதாவது:-
திருச்சி திரு தாந்தோணி ரோடு உறையூர் பகுதியில் மறைந்த தமிழக முதலமைச்சர் எம்ஜிஆருக்கு சொந்தமான கட்டிடம் மற்றும் காலியிடம் 80,000 சதுர அடி பரப்பளவில் உள்ளது. இதனுடைய இன்றைய சந்தை மதிப்பு ரூ. 25 கோடி இருக்கும்.
எம்ஜிஆர் மறைவுக்குப் பின் அவரது அண்ணன் எம்.ஜி. சக்கரபாணி மகள் மற்றும் மகன்கள் வாரிசுகளாக பதிவு செய்து, அவர்களது பெயரில் பட்டா பதிவு செய்யப்பட்டது.
பின்னர் வாரிசுகளின் பெயர்கள் நீக்கப்பட்டு அதிமுக பொதுச் செயலாளர் என பதியப்பட்டது. அதன்
பின்னர் அந்தப் பெயரும் நீக்கம் செய்யப்பட்டு ஒரு தனி நபரின் பெயரில் கணினி நிலப்பதிவேட்டில் பதியப்பட்டுள்ளது.
எம்ஜிஆரின் வாரிசுகளின் பெயர்களை ரத்து செய்ய வேண்டும் என்றால் வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்து கோட்டாட்சியரின் ஆணை பெற்று அதன் பேரில் எம்ஜிஆரின் வாரிசுகள் பெயர் நீக்கம் செய்யப்பட்டு இருக்க வேண்டும்.
ஆனால் இந்த முறை பின்பற்றப்படவில்லை.
இதுகுறித்து கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்திருந்தேன்.
கோட்டாட்சியர் 1- 10 -2021 மற்றும் 18 -10 -2021 ஆகிய தேதிகளில் என்னை அழைத்து விசாரணையும் மேற்கொண்டார். இந்த நிலையில் தற்போது நிலப்பதிவேட்டில் எம்ஜிஆரின் வாரிசுகளின் பெயர்கள் பதியாமல் அந்த தனி நபரின் பெயரும் நீக்கம் செய்யப்பட்டு பொதுச்செயலாளர் அதிமுக என கணினியில் பதியப்பட்டுள்ளது.
அதேசமயம் எம்ஜிஆர் தனது பெயரில் கிரயம் பெற்ற பத்திர நகலினை இத்துடன் இணைத்துள்ளேன்.
எம்ஜிஆர் தனது சொத்தினை அதிமுகவிற்கு பத்திரம் மூலம் வழங்கியிருந்தாரா ?அல்லது உயில் ஏதேனும் எழுதி வைத்தாரா ?என்பதை விளக்க வேண்டும்.
ஆகவே இந்த விவகாரத்தில் தாங்கள் (கலெக்டர்) கோட்டாட்சியரின் அலுவலக கோப்பினை பெற்று ,கோட்டாட்சியர் செய்த விசாரணை மற்றும் உத்தரவினை பரிசீலனை செய்து மீண்டும் வறுமையில் வாடும் எம்ஜிஆரின் வாரிசுகள் பெயர்களை நிலப்பதிவேட்டில் பதிய உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.