மணல் குவாரி வழக்கு: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் திருச்சியை சேர்ந்தவர்களுக்கு தமிழக அரசுக்கு ரூ.20 லட்சம் வழங்க உயர் நீதிமன்றம் தீர்ப்பு.
மணல் குவாரி வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாதை எதிர்த்து தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக அரசுக்கு ரூ.25 லட்சம் அபராதம் விதித்தது உயர் நீதிமன்றம் மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது.
இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மணல் குவாரி உரிமம் தொடர்பாக கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பிறப்பித்த உயர்நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாததால் தமிழக தொழில்துறை முதன்மை செயலாளர் குவாரி உரிமையாளர்களுக்கு ரூ.20 லட்சம், தலைமை நீதிபதி நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு எதிராக சாந்தி, பாலாஜி, விஷ்ணுவர்தன், உமா மகேஸ்வரி, பவானி ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனுவில், திருச்சி தொட்டியம் தாலுகா ஸ்ரீனிவாசநல்லூரில் காவிரி ஆற்றில் 2001 முதல் 2004 வரை மணல் குவாரி நடத்த உரிமம் பெற்றிருந்தோம். அடுத்த சில மாதங்களில் மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தியது. மணல் குவாரிகளை அரசு ஏற்றதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம்.

அந்த வழக்கில் அரசின் உத்தரவை நீதிமன்றம் உறுதி செய்த போதிலும், நாங்கள் சில மாதங்கள் குவாரி நடத்த அனுமதி வழங்கியது. இதற்கு எதிராக திருச்சி மாவட்ட ஆட்சியர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்தது. அதன் பின்னரும் உயர் நீதிமன்ற உத்தரவை மாவட்ட நிர்வாகம் அமல்படுத்தவில்லை. எனவே உயர் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத திருச்சி மாவட்ட ஆட்சியர் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் நடைபெற்று வந்தது. இநத் வழக்கில் நீதிபதி குமரேஷ்பாபு நேற்று அதிரடி உத்தரவிட்டார். அதன்படி, மணல் குவாரி நடத்தும் பொறுப்பை அரசு ஏற்றபின்பு மனுதாரர்களுக்கு ஆறு மாதம் குவாரி நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இருப்பினும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு காரணங்களை கூறி குவாரி நடத்த மனுதாரர்களுக்கு அனுமதி வழங்கவில்லை என்பது உறுதியாகி உள்ளது.
மேலும், இது தொடர்பாக, மனுதாரர்கள் அரசு தரப்புக்கு பல மனுக்கள் அனுப்பியும், நீதிமன்றத்தில் உத்தரவுகளை அனுப்பியும், அதன்மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நிறைவேற்றப்படாமல், 15 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. இந்தக் காலகட்டத்தில் பல மாவட்ட ஆட்சியர்கள் பொறுப்பில் இருந்து மாறியிருப்பார்கள். இதனால் தற்போதைய ஆட்சியரை மட்டும் குறை சொல்வதால் எந்த பயனும் இல்லை. எனவே, நீதிமன்ற உத்தரவை வேண்டும் என்றே மீறியதற்காக மனுதாரர்கள் 5 பேருக்கும் தமிழக தொழில்துறை முதன்மை செயலர் ரூ.20 லட்சம் வழங்க வேண்டும் என்று அதிரடி உத்தரவிட்டதுடன், இது தவிர உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்றும் கூறியது. அத்துடன், தமிழ்நாடு அரசு, இந்த தொகையை 8 வாரங்களில் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டு உள்ளார் .