காவல் நிலையம் முன் சகோதரிகள் விஷம் குடித்த விவகாரம் இன்ஸ்பெக்டர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம். தொடர்ந்து உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு.
தஞ்சாவூரில் கைதான அண்ணனை விடுவிக்க கோரி காவல் நிலையம் முன் விஷம் குடித்த தங்கை பரிதாபதாக உயரிழந்தார்.
மற்றொரு சகோதரி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலை இன்று காவல் நிலைய ஆய்வாளர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் நடுக்காவேரியை சேர்ந்தவர் அய்யாவு. இவருக்கு தினேஷ் (வயது 32) என்ற ஒரு மகனும், மேனகா (வயது 31), கீர்த்திகா (வயது 29) என்ற 2 மகள்களும் இருந்தனர். பட்டதாரியான இருவரும் அரசுப்பணி தேர்வுக்காக தயாராகி வந்துள்ளனர். இந்நிலையில் அய்யாவு, அப்பகுதியை சேர்ந்த சிலரின் தூண்டுதலின் பேரில் மதுபாட்டில்களை வாங்கி கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த தினேஷ், தனது தந்தையிடம் மதுபாட்டில்கள் விற்பனை செய்து தர சொன்ன நபர்களிடம் கடந்த 4ம்தேதி தகராறு செய்ததோடு அவர்களை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினரும் மோதிக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு செல்வதற்காக நடுக்காவேரி பேருந்து நிறுத்தத்தில் குடும்பத்தினருடன் நின்று கொண்டிருந்த தினேசை விசாரணைக்காக நடுக்காவேரி காவல்நிலையம் இன்ஸ்பெக்டர் ஷர்மிளா தலைமையிலான போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பொது இடத்தில் கத்தியை காட்டி மிரட்டியதாக கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டு தினேஷ் கைது செய்யப்பட்டார். போலீசாரை பின்தொடர்ந்து தினேஷின் குடும்பத்தினரும் நடுக்காவேரி காவல்நிலையத்துக்கு சென்றனர்.
அப்போது தினேஷின் சகோதரி மேனகா, தனக்கு நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது. அதனால் தனது சகோதரனை விட்டுவிடுங்கள் என்று இன்ஸ்பெக்டர் ஷர்மிளாவிடம் கூறி அழுதுள்ளார். மேலும் கீர்த்திகாவும் தனது சகோதரனை விடுவிக்கும்படி வலியுறுத்தி உள்ளார். ஆனால் இன்ஸ்பெக்டர், இருவரையும் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மேனகா, கீர்த்திகா இருவரும் காவல் நிலையம் முன்பு விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றனர். இதில் அதிர்ச்சியடைந்த போலீசார், இருவரையும் மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை 11 மணியளவில் சிகிச்சை பலனின்றி கீர்த்திகா உயிரிழந்தார். இதில் ஆபத்தான நிலையில் மேனகா தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திரண்டனர். கீர்த்திகா உடலை வாங்க மறுத்த உறவினர்கள், மரணத்திற்கு காரணமான இன்ஸ்பெக்டர் ஷர்மிளாவை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என கூறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த தஞ்சாவூர் டவுன் டிஎஸ்பி சோமசுந்தரம் மருத்துவமனைக்கு விரைந்து சென்று தினேஷின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் எந்தவித சுமூக தீர்வும் ஏற்படாததால் தொடர்ந்து போராட்டம் நீடித்தது.
கைதான தினேஷின் பெரியம்மாள் மகள் துர்கா கூறியதாவது: எனது சகோதரர் தினேஷ் மற்றும் சகோதரிகள் கீர்த்திகா, மேனகா ஆகியோர், எனது உறவினர் இறப்பிற்கு செல்வதற்காக நடுக்காவேரி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு மப்டியில் வந்த காவலர்கள் சிலர், தினேஷை நடுக்காவேரி காவல் ஆய்வாளர் சர்மிளா அழைத்து வர ெசான்னதாக கூறி அழைத்து சென்றனர். பின்னர் கீர்த்திகா, மேனகாவுடன் காவல் நிலையத்திற்கு மாலை 4.30 மணியளவில் சென்ற நான், எங்களது சகோதரர் தினேஷை விட்டு விடுமாறும் ஆய்வாளரிடம் வலியுறுத்தினோம். மேனகாவிற்கு நேற்று புதன்கிழமை நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதால் அவரை விடுவிக்கும்படி கேட்டோம். ஆனால் அதற்கு காவல் ஆய்வாளர் சர்மிளா, அவர் மீது 12 வழக்குகள் உள்ளது. எனவே விட முடியாது என கூறினார்.

மேலும் எனது சகோதரிகளை தகாத வார்த்தைகளால் திட்டினார். இதனால் மனமுடைந்த இரண்டாவது அக்கா மேனகா மற்றும் தங்கை கீர்த்திகா இருவரும் காவல் ஆய்வாளர் சர்மிளா முன்பு விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றனர். சகோதரிகள் விஷம் அருந்தும் போது காவல் நிலையத்தில் இருந்த காவலர்கள் யாரும் தடுக்கவில்லை. தற்கொலை செய்வது போல் நாடகமாடுவதாக கூறி போலீசார் திட்டினர். 45 நிமிடம் கழித்து தான், மருத்துவமனைக்கு கொண்டு ெசன்றனர். இதனால் தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைய சகோதரி கீர்த்திகா சிகிச்சை பலன் இன்றி நேற்று உயிரிழந்தார்.
மற்றொரு சகோதரி மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் உள்ளார். மேலும் தினேஷை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தினேஷ் மீது வழக்கு உள்ளது உண்மை தான். 4 வழக்குகள் தான் உள்ளது. மீதமுள்ள வழக்குகள் அனைத்தும் போலீசாரால் ஜோடிக்கப்பட்ட வழக்கு. எனது தங்கையின் இறப்பிற்கு காரணமான காவல் ஆய்வாளர் சர்மிளா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தினேஷை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும். இல்லையென்றால் நாங்கள் எனது தங்கையின் உடலை வாங்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்
இதனால் தஞ்சை மருத்துவக் கல்லூரியை மருத்துவமனையில் 2 ஏடிஎஸ்பி, மூன்று டிஎஸ்பி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், நடுக்காவிரி காவல் ஆய்வாளர் சர்மிளா காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜராம் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக கோட்டாட்சியர் செ. இலக்கியா விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இதனிடையே கீர்த்திகாவின் உடலை உடற்கூறாய்வு செய்வதற்கு காவல் துறையினர் முயற்சி செய்து வருகின்றனர்.
ஆனால், காவல் ஆய்வாளரைப் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். ஆய்வாளர் மீது எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். தினேஷ் மீது உள்ள அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளைக் காவல் துறை அலுவலர்களிடம் உறவினர்கள், சமூக அமைப்பினர் வலியுறுத்தினர்.
இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், கீர்த்திகாவின் உடலை உறவினர்கள் வாங்க மறுத்து, தங்களது சொந்த ஊரான நடுக்காவேரிக்கு போராட்டம் நடத்துவதற்காகப் புறப்பட்டுச் சென்றனர். இதனால் கீர்த்திகாவின் உடல் உடற்கூறாய்வு செய்யப்படாமல் உள்ளது.