திருச்சியில் மூதாட்டியின் ரூ.15 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்த திமுக பிரமுகர்.
தி.மு.க. பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார் – பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு.
திருச்சி தென்னூர் அண்ணா நகர் புது மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்தனம். இவரது மனைவி நல்ல பொண்ணு ( வயது 78 ) இவர் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று அப்பகுதி பொதுமக்களுடன் திரண்டு வந்தார்.அப்போது போலீசார் அனைவரையும் உள்ளே அனுமதிக்க மறுத்தனர்.இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.பின்னர் அவர்கள் மறியலில் ஈடுபட முயன்றனர்.அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மூதாட்டியுடன் 5 பேர் மட்டும் மனு கொடுக்க செல்லலாம் என்று தெரிவித்தனர்.
பின்னர் மூதாட்டி நல்ல பொண்ணு மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திருச்சி பஞ்சப்பூர் கிராமம் சாத்தனூர் பகுதியில் எனக்கு விவசாய நிலம் உள்ளது.அந்த நிலத்தில் 45 வருடமாக நான் விவசாயம் செய்து வருகிறேன். அந்த இடத்தில் தற்போது வேலி அமைக்க செல்லும்போது திருச்சியை சேர்ந்த திமுகவை பஞ்சப்பூர் பெரியசாமி (எ) கருவண்டு என்பவர் அடியாட்களுடன் வந்து என்னை மிரட்டி அடித்துவிட்டார் .இது தொடர்பாக எனது பேரன் எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனது வயது முதிர்வு காரணமாக என்னை ஏமாற்றி ,எனக்கு சொந்தமான ரூ. 15 கோடி மதிப்பிலான 3.5 ஏக்கர் நிலத்தை அபகரித்து விடலாம் என்ற எண்ணத்துடன் அந்த திமுக பிரமுகர் பெரியசாமி செயல்படுகிறார்.
எனவே தவறு செய்த நபர்களையும், அதற்கு உடந்தையாக இருந்தவர்களையும் தீவிர விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனே எனது வயது முதிர்வு காரணமாக எனது உடல் நிலையை கருத்தில் கொண்டு தவறு செய்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து எனது நிலத்தை மீட்டு தரும்படி கேட்டுக்கொள்கிறேன் .இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.