திருச்சியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 34 பெண்களுக்கு மீண்டும் காவல்துறை உடற்தகுதித் தேர்வு. கமிஷனர் காமினி ஆய்வு .
திருச்சி: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம், 2023-ல் எஸ்.ஐ., காவலர்கள் ஆகிய பணியிடங்களுக்கு நடத்திய எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அப்போதே உடற்தகுதித் தேர்வு நடைபெற்றது.
எஸ்.ஐ.எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 5 பேர், காவலர்கள் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 29 பேர், கர்ப்பிணிகளாக இருந்ததால் மருத்துவ ரீதியாக உடற்தகுதித் தேர்வில் பங்கேற்கத் தகுதியில்லை என அறிவிக்கப்பட்டனர். இதையடுத்து, இந்த 34 பேரும், தங்களுக்கு மறு உடற்தகுதித் தேர்வு நடத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 34 பேருக்கும் குழந்தை பிறந்த பிறகு வாய்ப்புத் தர வேண்டும் என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்து க்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, திருச்சி கே.கே. நகரில் உள்ள திருச்சி மாநகர காவல் மைதானத்தில் 34 பேருக்கும் உடற்தகுதித் தேர்வு நேற்று முன்தினம் தொடங்கியது. திருச்சி சரக டிஐஜி வருண்குமார் தலைமையில், திருச்சி மாநகர வடக்கு காவல் ஆணையர் சிபின் மற்றும் ஏடிஎஸ்பி, டிஎஸ்பி, உதவி காவல் ஆணையர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர், மறு உடற்தகுதித் தேர்வை நடத்தி வருகின்றனர்.
இந்த நடவடிக்கைகளை திருச்சி மாநகர காவல் ஆணையர் என்.காமினி நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து, விரைவில் தேர்ச்சி பெற்றவர்கள் விவரம் தெரியவரும் என காவல் துறையினர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.