திருச்சி அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் டிரைவர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.
நண்பன் படுகாயமடைந்தார்.திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த அனியாப்பூர் காட்டையம்பட்டியை சேர்ந்தவர் சதீஷ்(வயது 34).
பெரிய சமுத்திரத்தை சேர்ந்தவர் பாலா (எ) பாலசுப்ரமணியன்(வயது 32) டிரைவர். காந்திநகரை சேர்ந்தவர் மதன்பாபு(வயது 30). நண்பர்களான 3 பேரும், நேற்று முன்தினம் இரவு ஒரே பைக்கில் திருச்சியிலிருந்து மணப்பாறைக்கு திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது இரவு 10.30 மணி அளவில் மணப்பாறை அருகே மறவனூரில் வந்தபோது பின்னால் திருச்சியிலிருந்து மணப்பாறை வந்த கார், பைக் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் சதீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற 2 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மணப்பாறை போலீசார், பலத்த காயமடைந்த பாலா, மதன்பாபு ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை தனியார் மருத்துவமனைக்கும், உயிரிழந்த சதீஷ் உடலை பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் பாலா மேல் சிகிச்சைக்காக திருச்சி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். இங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் உயிரிழந்தார். மதன்பாபு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.