திருச்சி மாவட்டத்தில் குடும்ப அட்டையில் பெயா் மாற்றம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்ய நாளை சனிக்கிழமை 11 வட்டங்களிலும் பொதுவிநியோகத் திட்ட சிறப்பு குறைதீா்க்கும் முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வெளியிட்டுள்ள அறிக்கையில்
கூறியதாவது:- திருச்சி கிழக்கு வட்டத்தில் கல்லுக்குழி, திருச்சி மேற்கு வட்டத்தில் கிராப்பட்டி காலனி-1, திருவெறும்பூா் வட்டத்தில் அய்யம்பட்டி, ஸ்ரீரங்கம் வட்டத்தில் பனையபுரம், மணப்பாறை வட்டத்தில் மாதம்பட்டி, முசிறி வட்டத்தில் சந்தபாளையம், துறையூா் வட்டத்தில் கிருஷ்ணாபுரம், தொட்டியம் வட்டத்தில் திருநாராயணபுரம், மருங்காபுரி வட்டத்தில் கண்ணூத்து, லால்குடி வட்டத்தில் பெருவளப்பூா், மண்ணச்சநல்லூா் வட்டத்தில் இருங்கூா் ஆகிய பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் பொதுவிநியோகத் திட்ட குறைதீா் முகாம் நடைபெறும்.
காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் இந்த முகாம்களில் அந்தந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் தவறாமல் கலந்து கொண்டு, குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டைக்கான விண்ணப்பங்களை வழங்கலாம் என திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார் .