நெடுஞ்சாலைத்துறை சார்பில் திருச்சி ஜங்சன் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிய போது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
திருச்சி ஜங்ஷனில் பகுதியில் இன்று பரபரப்பு.
30 க்கும் மேற்பட்ட கடைகள் முன்பு இருந்த ஆக்கிரப்புகள் அகற்றம்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போலீசாருடன் வாக்குவாதம்.
தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான
சென்னை – திருச்சி – மதுரை ரோடு ஜங்ஷன் பகுதியில் உள்ள சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி மாநில நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் செந்தில்,கோட்ட பொறியாளர் கண்ணன், உதவி கோட்ட பொறியாளர் புகழேந்தி, ஆகியோர் அந்த பகுதியில் உள்ள 30 கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பினர்.
அதைத்தொடர்ந்து இன்று காவல்துறை பாதுகாப்புடன் நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் நடராஜன், அசோக் உள்ளிட்ட அதிகாரிகள் ஜேசிபி எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்ற தொடங்கினர். முதலில் கார் ஓட்டுநர்கள் தங்கும் அறை, இரண்டு டீக்கடை ஆகிய ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து திருச்சி மாநகர விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகம் முன்பு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர் .
இது பற்றிய தகவல் அறிந்த அக்கட்சியின் மாவட்ட செயலாளர் கனியமுதன், மாநில துணைத்தலைவர் அரசு,வக்கீல் சதீஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது. எங்களுக்கு நேரம் கொடுங்கள் நாங்களே ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்கிறோம் என தெரிவித்தனர்.
இதனால் போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது .இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.பின்னர் ஆக்கிரமிப்புகளை அகற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டு அருகில் உள்ள மற்ற கடைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து 30க்கும் கடைகளில் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகள் இன்று அகற்றப்பட்டன.
எதிர் திசையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நாளை தொடரும் என கூறப்படுகிறது .
ஆக்கிரமிப்பு அகற்றும் பகுதியில் ஏதும் மோதல் போன்ற அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருக்க கன்டென்மெண்ட் காவல் நிலைய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர் .