Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நெல்லையப்பர் திருக்கோயில் யானை உடல்நல குறைவால் இன்று அதிகாலை உயிரிழந்தது.

0

திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயில் யானை காந்திமதிக்கு கடந்த இரு நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாகத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இருப்பினும், கால்நடை மருத்துவர்களின் சிகிச்சை பலனில்லாமல் காந்திமதி யானை உயிரிழந்துள்ளது. 56 வயதான காந்திமதிக்கு கடந்த சில ஆண்டுகளாகவே மூட்டு வலி உட்பட சில உடல்நிலை பிரச்சினைகள் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்று திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில். ஒவ்வொரு ஆண்டும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்த நெல்லையப்பர் கோயிலுக்குப் பக்தர்கள் வருவார்கள்.

இந்த கோயிலில் காந்திமதி என்ற யானை பக்தர்களை ஆசீர்வதித்து வந்தது. கம்பீரமாக நின்று பக்தர்களை வரவேற்று வந்த இந்த யானைக்கு கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நிலை பிரச்சினைகள் இருந்து வந்தது. 56 வயதாகும் இந்த யானைக்கு வயது முதிர்வு காரணமாக மூட்டு வலி உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்தது. இதற்காகச் சிறப்புச் சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்தது.

5 ஆண்டுகளுக்கு மேலாகவே மூட்டு வலி பிரச்சினை இருந்த சூழலில், கடந்த ஒரு மாதமாக வலி அதிகரித்துள்ளது. இதனால் கால்நடை மருத்துவர்கள் காந்திமதி யானைக்குத் தொடர் சிகிச்சை அளித்து வந்தனர். இதனால் படுக்காமல் நின்றவாறே தூங்கி, காந்திமதி தினசரி பணிகளை மேற்கொண்டு வந்தது. இதற்கிடையே நேற்று அதிகாலை படுத்துத் தூங்கிய காந்திமதியால் அதன் பிறகு மீண்டும் எழ முடியவில்லை.

இது தொடர்பான தகவல் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மற்றும் வனத்துறை மருத்துவர்களுக்கு அளிக்கப்பட்ட சூழலில், அவர்கள் உடனடியாக கோயிலுக்கு வந்து காந்திமதிக்கு மருந்துகளைக் கொடுத்தனர். மேலும், கிரேன் உதவி உடனும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி உயிரிழந்தது.

56 வயதான காந்திமதி யானை உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை உயிரிழந்தது.

இந்த காந்திமதி யானை கடந்த 1985ஆம் ஆண்டு கோயிலுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டது. நயினார் பிள்ளை என்பவர் இந்த யானையை நன்கொடையாக அளித்தது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.