இந்திய அணியின் மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முடிவில் ஓய்வை அறிவித்தார்.
அவரை விராட் கோலி கட்டி அணைத்து நீண்ட நேரம் பேசினார். ஆஸ்திரேலிய சுழற் பந்துவீச்சு ஜாம்பவான் நாதன் லியோன் அவரை உருக்கமாக வாழ்த்தினார்.
இந்த சம்பவம் கிரிக்கெட் உலகில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் அஸ்வினுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
பிரிஸ்பேனில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் பேட்டிங் மழையால் பாதிக்கப்பட்ட போது ஆஸ்திரேலிய ஊடகவியலாளர்கள் சிலர் தங்களின் சமூக வலைதள பக்கத்தில் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது என பதிவிட்டுள்ளனர்.
அதை தொடர்ந்து இந்திய அணியின் ஓய்வறையில் விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வினை கட்டியணைத்து அவருடன் நீண்ட நேரம் பேசினார். அதன் பின் தோள்களில் கை போட்டு அமர்ந்திருந்தார். அடுத்து அஸ்வின், ஜடேஜாவை சந்தித்து தனது ஓய்வு முடிவை கூறினார்.

ஜடேஜா மற்றும் அஸ்வின் இணை பிரியாமல் பல போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட நிலையில் அவரும் இந்த செய்தியால் சோகமானார். அதன் பின் ஆஸ்திரேலிய சுழற் பந்துவீச்சு ஜாம்பவான் நாதன் லியோனை சந்தித்து தனது ஓய்வு முடிவை கூறினார் அஸ்வின்.
நாதன் லியோன் மற்றும் அஸ்வின் இடையேயான டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்துவதில் போட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது. பலமுறை நாதன் லியோன் அஸ்வினை பாராட்டி பேசி இருக்கிறார். அஸ்வின் தனக்கு நிறைய கற்றுக் கொடுத்து இருப்பதாகவும் கூட அவர் குறிப்பிட்டு இருந்தார்.
பின்னர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேப்டன் ரோஹித் சர்மாவுடன் அமர்ந்து தனது ஓய்வு முடிவை அறிவித்தார் ரவிச்சந்திரன் அஸ்வின். பின்னர் ரோஹித் சர்மாவை கட்டி அணைத்து விடை பெற்றார்.
அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் 537 விக்கெட்டுகள் மற்றும் 3503 ரன்கள் குவித்துள்ளார். 37 முறை ஐந்து விக்கெட் எடுத்த சாதனையை செய்துள்ளார். 6 டெஸ்ட் சதங்கள் அடித்து இருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை ஆட்டநாயகன் விருதை வென்ற வீரர் ஆவார்.
தமிழகத்தைச் சேர்ந்த 38 வயதான அஸ்வின் தற்போது உலக டெஸ்ட் தரவரிசையில் உலக அளவில் ஆல்ரவுண்டரில் மூன்றாம் இடத்திலும் ,பந்துவீச்சில் ஐந்தாம் இடத்திலும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
யாருமே எதிர்பார்க்காத வகையில் தனது ஓய்வை அறிவித்துள்ளார்கள் அஸ்வின் .