திருச்சி என்.ஐ.டி.,யில், ஒரு மாதத்தில் மட்டும், மாணவிக்கு பாலியல் தொல்லை, மாயம், தற்கொலை முயற்சி என தொடர்ந்து சம்பவங்கள். நிர்வாகத்தினர் அதிர்ச்சி .
அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் திருச்சி என்.ஐ.டி.
இந்த கல்வி நிறுவன மாணவி ஒருவர் மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம், மேலும் அந்நிறுவனத்தை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், துவாக்குடியில், தேசிய தொழில்நுட்ப கழகம் எனப்படும் மத்திய அரசின் என்.ஐ.டி., கல்வி நிறுவனம் செயல்படுகிறது.

இந்தியாவில் உள்ள என்.ஐ.டி.,களில் முதலிடத்தில் இந்த நிறுவனம் உள்ளது.இங்கு இன்ஜினியரிங் படித்த தமிழக மாணவி, 25 நாட்களுக்கு முன் கல்லுாரி விடுதியில் இருந்த போது, எலக்ட்ரீஷன் ஒருவரால் பாலியல் சீண்டலுக்கு ஆளானார். கல்லுாரி மாணவ – மாணவியர் போராட்டம் நடத்தி, அவர் கைது செய்யப்பட்டு, பிரச்னை முடிவுக்கு வந்தது.
அடுத்து, இந்த நிறுவனத்தில் படிக்கும் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஓஜஸ்வி என்ற எம்.சி.ஏ., மாணவி, என்.ஐ.டி.,யில் இருந்து காணாமல் போய்விட்டார். அவர் காணாமல் போய், 15 நாட்களுக்கு மேல் ஆகிய நிலையில், மத்திய பிரதேசம் மற்றும் தமிழக போலீசார், அந்த மாணவியை தேடி வருகின்றனர். உடன் படிக்கும் மாணவர்களால் ஏற்பட்ட அவமதிப்பால் அந்த மாணவி மாயமானதாக தெரிய வந்துள்ளது.
இச்சூழலில் நேற்று முன்தினம், என்.ஐ.டி.,யில் முதலாண்டு கட்டடக்கலை பிரிவு இன்ஜினியரிங் படிக்கும் சத்தீஸ்கர் மாநில மாணவி சுஜய் சிதி, (வயது 18) என்பவர், கல்லுாரி விடுதியில் தங்கவும், ஆர்க்கிடெக்சர் படிக்க விருப்பம் இல்லாததாலும், 10க்கும் மேற்பட்ட பாரசிட்டமால் மாத்திரைகளை சாப்பிட்டு, தற்கொலைக்கு முயன்று உள்ளார்.
இதையடுத்து, திருச்சி அப்போலோ மருத்துவமனையில் மாணவி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து துவாக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
திருச்சி என்.ஐ.டி.,யில், ஒரு மாதத்தில் மட்டும், மாணவிக்கு பாலியல் தொல்லை, மாணவி மாயம், மாணவி தற்கொலை முயற்சி என அடுத்தடுத்த சம்பவங்கள் நடந்துள்ளது, கல்லுாரி நிர்வாகத்துக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.