உறையூர் குறத் தெரு பகுதியில்
நகர் நல சுகாதாரத்மைய கட்டிடத்தின் மீது கல்வீச்சு.
திருச்சி உறையூர் குறத்தெரு பகுதியில் நகர் நல சுகாதார மையம் உள்ளது. இந்த நகர் நல மையத்தில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தினந்தோறும் சுமார் 100 பேருக்கு மேல் காய்ச்சல், தலைவலி , நீரிழிவு மற்றும் மகப்பேறு சிகிச்சை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நகர் நல மையத்தில் நேற்று மாலை அப்பகுதியில் வசிக்கும் குடிபோதை ஆசாமிகள் அடாவடித்தனமாக நகர் நல மையத்தின் கண்ணாடிகளை கல் வீசி தாக்கியுள்ளனர், இதனால் பணியில் இருந்த செவிலியர்கள் சிகிச்சைக்காக வந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்துள்ளனர்.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பும் இதே போன்று நகர் நல மையத்தின் ஜன்னல் கண்ணாடிகளை குடிபோதை ஆசாமிகள் கல்வீசி தாக்கியதோடு சேதப்படுத்தினர், அதற்காக உறையூர் காவல் துறையினர் வழக்கு பதிந்த போது சேதம் அடைந்த கண்ணாடிகளை சரி செய்து விடுகிறோம் என்று கூறி குடி போதை ஆசாமிகள் சரி செய்து தப்பித்து விட்டனர் .
இப்பொழுது மீண்டும் அதே போன்ற சம்பவம் அரங்கேறி உள்ளது. குறத்தெரு பகுதியில் அமைந்துள்ள படிப்பகத்தில் பின்புறத்தில் காலை 11 மணி ( டாஸ்மாக் திறக்கும் முன்பே ) முதல் மூன்று மணி வரை குடி போதை ஆசாமிகள் சுமார் 20 பேருக்கு மேல் அங்கு அமர்ந்து மது, கஞ்சா அருந்துவதை வாடிக்கையாகவே வைத்துள்ளனர் .
அப்பகுதியின் பொதுமக்கள் உறையூர் காவல்துறையினருக்கு பலமுறை புகார் அளித்தும் புகார் மேல் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருந்து வருகின்றனர்.
உறையூர் காவல்துறையினர் தொடர்ந்து இதுபோல் நடந்து கொள்ளும் போதை ஆசாமிகளின் அட்டூழியத்தை அடக்கி அவர்கள் மேல் இரும்பு கரம் கொண்டு தக்க நடவடிக்கை மேற்கொண்டால் தான் அப்பகுதியின் பொதுமக்களுக்கும் நகர் நல மையத்தில் பணிபுரியும் செவிலியர்களுக்கும் பாதுகாப்பான சூழல் ஏற்படும் என்பதில் ஐயமில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நகர்நல மைய கட்டிடத்தின் கண்ணாடியை உடைத்த போதை ஆசாமிகளை தேடி வருகின்றனர்.