திருச்சி அருகே உள்ள ஓலையூர் குடி தெருவை சேர்ந்தவர் அந்தோணி குமார் (வயது 40). இவர் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார்.
அதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர் வெட்டு சங்கர் (எ) ஜெய்சங்கர் (வயது 25) இவர் லோடு ஆட்டோ டிரைவர் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு ஓலையூர் காளியம்மன் கோவிலுக்கு சொந்தமான மைதானத்தில் இருவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது அந்தோணி குமாருக்கும் ஜெய்சங்கருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ஜெய்சங்கர் அந்தோணி குமார் தலையில் அந்த பகுதியில் பிளாட்டுக்காக நடப்பட்டிருந்த கல்லை தூக்கி தாக்கியுள்ளார்.
இதில் அந்தோணி குமார் பலத்த காயமடைந்துள்ளார். பின்னர் ஜெய்சங்கர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்து உள்ளார். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அந்தோணி குமாரை பரிசோதித்து பார்த்தபொழுது அந்தோணி குமார் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இது சம்பந்தமாக 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உடனடியாக மணிகண்டம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மணிகண்டம் போலீசார் அந்தோணி குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து ஜெய்சங்கரை தேடி வருகின்றனர்.
மேலும் ஜெய்சங்கரை மணிகண்டம் போலீசார் கைது செய்த பிறகே அந்தோணி குமாரை தாக்கி கொலை செய்தது ஜெய்சங்கர் மட்டும் தானா அல்லது அவருடன் வேறு யாரேனும் இருந்தார்களா என்பது தெரியவரும்.