வரும் பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில்
திமுக, அதிமுக கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில் தேசிய கட்சியான பாஜக முதல்கட்டமாக 9 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது.
அதில் தற்போது பாஜக மாநில தலைவராக இருக்கும் அண்ணாமலை பெயரும் இடம்பிடித்திருக்கிறது. கோவை நாடாளுமன்றத் தொகுதியில் அண்ணாமலை போட்டியிட இருக்கிறார்.
இந்த சூழலில் போட்டியிட வாய்ப்பளித்த பிரதமர் மோடிக்கு அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் இந்திய அளவில் 400க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெல்லும் என்று கூறியுள்ள அண்ணாமலை, அந்த 400-ல் தமிழ்நாட்டில் பாஜகவின் பங்கும் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
வளர்ச்சிக்கான அரசியல் மாற்றத்தை தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்ப்பதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். பிரதமருக்கு மட்டுமின்றி,பாஜக தேசியத் தலைவர் நட்டா,உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய செயலாளர் பி.எல். சந்தோஷ் ஆகியோருக்கும் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.
எத்தனை இடங்களில் தமிழ்நாட்டில் வெற்றி பெறுவோம் என்று குறிப்பிடாமல், கணிசமான இடங்களில் வெற்றி பெறுவோம் என்றும் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முதல்கட்டமாக போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்த பாஜக, மற்ற இடங்கள் எவை என்றும் வெளியிட்டுள்ளது. பிரதான இடங்களில் வெற்றி பெறும் முயற்சியில் நட்சத்திர வேட்பாளர்களை பாஜக களமிறக்கியிருக்கிறது.