தமிழகத்தில் உள்ள அனைவரும் பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிப்போம். தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பு மாநில தலைவர் திருச்சியில் பேட்டி.
தமிழ்நாடு நரிக்குறவர்கள் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. கூட்டமைப்பின் மாநில தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்புக்கு மாநில பொறுப்பாளர்களை தேர்வு செய்வது, மாவட்டம் வாரியாக சங்கங்களை ஏற்படுத்தி பொறுப்பாளர்களை நியமிப்பது மற்றும் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் வாக்களிப்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு நரிக்குறவர்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கிடையே மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்…
நரிக்குறவர்களை பழங்குடியின மக்கள் பட்டியலில் இணைத்தும் இதுவரை அதற்கான சான்றிதழை பெற இயலவில்லை. நரிக்குறவர்கள் தொழில் முன்னேற்றம் அடைய தமிழகத்தில் உள்ள பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி, சுற்றுலா தளம், பேருந்து நிலையம் மற்றும் அன்னதானத் திட்டத்தின் கீழ் இயங்கும் பிரசித்தி பெற்ற கோவில்களில் தலா ஐந்து கடைகள் என தமிழகம் முழுவதும் 8000 கடைகளை கேட்டோம்.
ஆனால் 400 கடைகள் தருவதாக தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், தற்பொழுது வரை ஒரு கடை கூட கொடுக்கப்படவில்லை.
கடந்த 75 வருடங்களாக எங்களுடைய கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள ஒரு லட்சத்து 50 ஆயிரம் நரிக்குறவர்கள் இணைந்து பாரதிய ஜனதா கட்சிக்கு வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் ஆதரவளிப்பது என முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.