2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் ஏற்கனவே திமுக தலைமையில் கூட்டணி உறுதி செய்யப்பட்டு அடுத்தக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றது.

பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறிய அதிமுக தனது தலைமையில் கூட்டணியை அமைக்க தீவிரமாக பணியாற்றி வருகின்றது. இந்நிலையில் இன்று அதிமுக சார்பில் முன்னாள அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் தங்கமணி மற்றும் அதிமுக பொறுப்பாளர் பெஞ்சமின் ஆகியோர் தேமுதிக பொதுச் செயலாளர் பிரமலதா விஜயகாந்த்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வேலுமணியிடம் அதிமுக – தேமுதிக கூட்டணி உறுதியா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இருவரும் (அதிமுகவும் தேமுதிகவும்) சந்தித்து பேசியிருக்கின்றோம் என்றால், நீங்களே புரிந்து கொள்ளுங்கள் வேண்டாமா’ என்பது போல் பதில் அளித்தார். மேலும் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியுள்ளோம். இரு தரப்பிலும் குழு அமைக்கப்படும். குழு அமைக்கப்பட்ட பின்னர் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெறும். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டது என கூறினார்.
அதிமுக தரப்பில் தேமுதிக-விற்கு 4 தொகுதிகள் வரை ஒதுக்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிருஷ்ணகிரி, விருதுநகர் தொகுதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கடலூர், திருச்சி தேமுதிகவிற்கு ஒதுக்க அதிமுக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது.