தற்போதைய திருச்சி எம்பி திருநாவுக்கரசர், “வாய்ப்புக் கிடைத்தால் மீண்டும் திருச்சியில் போட்டியிட விருப்பம்” என கூறியிருந்தார் .
இதைவைத்து திருநாவுக்கரசு மீண்டும் திருச்சிக்கு சீட் கிடைப்பது சிரமம்” என திருச்சிக்குள் செய்திகள் பரவியது.
கடந்த முறை திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திருநாவுக்கரசர் சுமார் 4.60 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். புதுக்கோட்டை மாவட்டத்தில் அவருக்கு இருக்கும் தனிப்பட்ட செல்வாக்கு காரணமாக அவர் மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்து அவரை மக்களவைக்கு அனுப்பினர். ஆனால், அந்த நம்பிக்கை பொய்த்துப் போனது. கடந்த ஐந்தாண்டு காலத்தில் அவரது செயல்பாடுகள் சொல்லும்படியாக இல்லை. எம்பி என்று ஒருவர் இருப்பதையே திருச்சி தொகுதி மக்கள் மறந்து விட்டனர்.
திருநாவுக்கரசர்
தனது செயல்பாடுகள் சரி இல்லை என்பதை திருநாவுக்கரசரே அண்மையில் ஒப்புக்கொண்டுள்ளார். “ஐந்து ஆண்டுகள் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தும், மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. கொரோனா பாதிப்பால் இரண்டு ஆண்டுகள் மட்டுமே தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கப்பட்டது. எனது அரசியல் அனுபவத்தில் இந்த 5 ஆண்டுகள் மக்கள் பணியாற்றியது திருப்தி இல்லாமல் உள்ளது.
அரசியலுக்கு வந்து 50 ஆண்டு காலம் ஆகிறது. இதுவரை 13 தேர்தல்களைச் சந்தித்து மாநில அமைச்சர், மத்திய அமைச்சர் மட்டுமல்லாது, எம்பி-யாகவும் இருந்துள்ளேன். ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் எம்பி-யாக இருந்து நிறைவாக பணி செய்துள்ளோம் என்ற திருப்தி எனக்கு இல்லை” என்று வருத்தப்பட்டு தெரிவித்துள்ளார் .
இருந்த போதும் அடுத்த தேர்தல் வரவிருப்பதால் அண்மைக் காலமாக திருச்சிக்கு அடிக்கடி வந்து படம் காட்டி செல்கிறார் திருநாவுக்கரசர்.
ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு இந்த முறை அதிகபட்சம் ஏழு இடங்களுக்கு மேல் தராது திமுக என்று சொல்லப்படுவதால் திருச்சி தொகுதி அக்கட்சிக்கு கிடைக்காது என்கிறார்கள்.
அப்படியே தொகுதி கிடைத்தாலும் அதில் திருநாவுக்கரசருக்கு வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது எனவும் காங்கிரஸ் கட்சியினரை சொல்கிறார்கள். இந்த நிலையில் தனக்கு மீண்டும் திருச்சியில் போட்டியிடவே விருப்பம் என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
“மீண்டும் திருச்சியில் போட்டியிட விரும்புகிறேன். ஆனால் அதை நானே சொல்ல முடியாது. எங்கள் கட்சித் தலைமையும் திமுக கூட்டணியும் முடிவு எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார் .
அண்மையில் அண்ணா அறிவாலயத்தில் நடந்த திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் திருச்சியை காங்கிரசுக்கு வழங்கக்கூடாது என்று திமுகவினர் ஒருமித்த குரலில் கருத்து தெரிவித்தனர். “திருநாவுக்கரசர் மீது மக்களுக்கு அதிருப்தி இருப்பதால் அது தேர்தலில் எதிரொலிகலாம்” என்று அவர்கள் ஒரே குரலில் சொன்னார்கள்.
வெளிப்படையாக இப்படியொரு காரணத்தைச் சொன்னாலும் உள்ளுக்குள் இன்னொரு விஷயமும் இருக்கிறது. திருச்சியை திமுகவுக்கு கேட்டுப்பெற வேண்டும். அந்தத் தொகுதியில் அமைச்சர் நேருவின் மகன் அருண் நேருவை களமிறக்க வேண்டும் என்பதே திமுகவினரின் அந்த மறைமுக திட்டம். ஆக, இம்முறை அருண் நேருவே போட்டியில்லை என்றாலும் திருச்சி தொகுதியில் காங்கிரசுக்கு வேலை இல்லை என்கிறார்கள் திருச்சி திமுகவினர் .