சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 3 வாலிபர்களுக்கு 20 ஆண்டு சிறை . தீர்ப்பை கேட்ட 2 வாலிபர்கள் தற்கொலை முயற்சி.திருச்சி கோட்டில் பரபரப்பு .
சிறுமி பாலியல் தொல்லை சம்பவம் தொடர்பான வழக்கில் மூவருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதில் இருவர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி, திருவானைக்கா பகுதியைச் சேர்ந்தவர் ர.பசுபதி (வயது 22). அவரது நண்பர்கள் அதே பகுதியைச் சேர்ந்த வரதராஜன் (23), திருப்பதி (24). கடந்த 16.8.2020 அன்று, சிறுமியிடம் பாடப்புத்தகத்தை எடுத்துவரச் சொல்லியுள்ளார் பசுபதி. சிறுமி புத்தகத்தை எடுத்துக்கொண்டு பசுபதி வீட்டுக்குச் சென்றதும் மூவரும் சேர்ந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரின்பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கில் இன்று வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. குற்றம் உறுதிசெய்ததையடுத்து மூவருக்கும் தலா 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ,15 ஆயிரமும், கட்டத்தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு அரசு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவு பிறப்பித்தார்.

தீர்ப்பு வழங்கப்படவிருந்த நிலையில், வழக்கில் தொடர்புடைய இளைஞர்கள் மூவரும் நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தப்பட்டனர். நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பை வாசித்ததும் நீதிமன்ற அறைக்குள்ளேயே 3 பேரும் கதறி அழுதனர். இதில் பசுபதி, திருப்பதி ஆகிய இருவரும் நீதிமன்றம் அமைந்துள்ள 2 ஆவது மாடியிலிருந்து, யாரும் எதிர்பாராத நிலையில் திடீரென கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றனர். இதைனையடுத்து அங்கிருந்த, போலீசார் காயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் நீதிமன்ற வளாகத்தில் இன்று மாலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.