அமைச்சர் நேருவுக்கு எதிராக, எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி துாக்கிய விவகாரத்தில், லால்குடி எம்.எல்.ஏ. சவுந்தரபாண்டியன் தன் பதவியை ராஜினாமா செய்து, முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பிய தகவல், அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து, ஆளும் கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:
திருச்சி மாவட்ட எம்.எல்.ஏ.,க்களின் தொகுதி வளர்ச்சி பணிகள், உள்ளாட்சி மேம்பாட்டு திட்டங்கள் அனைத்தையும், நேரு தரப்பில் சிலர் கவனித்து வருகின்றனர்.
அதனால், நேருவுக்கு எதிராக, லால்குடி, துறையூர், ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி துாக்கினர்.
சுதந்திர தினத்தையொட்டி லால்குடி தொகுதியில், அரசு திட்டங்கள் தொடர்பான நிகழ்ச்சிகளை, நேரு துவக்கி வைத்தார். அத்தொகுதி தி.மு.க., – எம்.எல்.ஏ., சவுந்தரபாண்டியன் அந்த நிகழ்ச்சியை புறக்கணித்தார். அதைத் தொடர்ந்து அதைத் தொடர்ந்து நீட் தேர்வு உண்ணாவிரதப் போராட்டத்தில கலந்து கொள்ளவில்லை.
இதனை தொடர்ந்து சௌந்தரபாண்டியன் தன் மனக்குமுறலை ஒரு நீண்ட கடிதமாக, முதல்வருக்கு எழுதி அனுப்பியுள்ளார்.
அதில், தன் தொகுதியில் நிறைவேற்றிய, நிறைவேற்றப்பட உள்ள ‘டெண்டர்’ பணிகளின் கமிஷன் விவகாரத்தையும், சம்பந்தப்பட்ட கான்ட்ராக்ட் நிறுவனங்கள் பெயர் மற்றும் தொகை விபரங்களையும் குறிப்பிட்டுள்ளார். மேலும், நேரு மகன் அருண் மற்றும் திருச்சி அறிவாலயத்தில் கோலோச்சும் கவி ஆகியோரின் செயல்பாடுகளையும் புகாராக தெரிவித்துள்ளார். எம்.எல்.ஏ.,க்களை நேரு ஏமாற்றியது, முகத்தை இறுக்கமாக வைத்துக் கொள்வது, இடைத்தேர்தல் நடக்கும் என மிரட்டுவது போன்ற விஷயங்களையும், விரிவாக எழுதியுள்ளார். இனி தனக்கு எம்.எல்.ஏ., பதவி வேண்டாம் என்றும், இதையே ராஜினாமா கடிதமாக எடுத்துக் கொள்ளுமாறும், அந்த கடிதத்தில் சவுந்தர பாண்டியன் விரக்தியை கொட்டியுள்ளார்.
அக்கடிதத்தை படித்த முதல்வர் ஸ்டாலின் அதிர்ச்சி அடைந்தனர்.
நேருவை அழைத்து, எம்.எல்.ஏ.,க்களின் பிரச்னைக்கு தீர்வு காணுமாறு உத்தரவிட்டனர். இதையடுத்து, நேரு, அவசர அவசரமாக திருச்சி வந்து அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.,க்களை அழைத்து பேசினார்.
பின், மாவட்ட அரசு உயர் அதிகாரிகளை அழைத்து, ‘எம்.எல்.ஏ.,க்கள் விரும்புகிற பணிகளை செய்து கொடுங்கள்; இனி வரும் டெண்டர்களை அவர்களுக்கே கொடுங்கள். இனிமேல் எனக்கும் டெண்டருக்கும் சம்பந்தம் இல்லை எனக் கூறியுள்ளார் எனக் கூறப்படுகிறது.