மதுரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிமுக மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் மதுரைவாசிகளே ஸ்தம்பித்தனர். தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் இருந்து தலா 1000 முதல் 1500 வாகனங்களில் தொண்டர்கள் மதுரைக்கு படையெடுத்தனர்.
இந்த கூட்டத்தை பார்த்துவிட்டு இது மதுரை மாநாடா இல்லை சித்திரை திருவிழாவா என பேசும் போது அதிமுக நிர்வாகிகளும் முன்னாள் அமைச்சர்களும் கேட்டனர். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என இந்த நிகழ்வு களைகட்டியது.
இந்த விழாவுக்கு 10 லட்சம் பேர் வந்திருப்பார்கள் என சொல்லப்படுகிறது. மாநாட்டுக்கு வருவதற்காக சாப்பாடு ஏற்பாடுகள் தடபுடலாக செய்யப்பட்டன. சைவ உணவு பரிமாறப்படும் என முன் கூட்டியே சொல்லப்பட்டது. அது போல் புளி சாதம், சாம்பார் சாதம் உள்ளிட்டவை தயார் செய்யப்பட்டது.
இதற்காக 10 ஆயிரம் சமையல் கலைஞர்கள் வருகிறார்கள் என சொல்லப்பட்டது. இவர்களுக்கு தேவையான அனைத்து மளிகை சாமான்களும் வாங்கித் தரப்பட்டன. இந்த நிலையில் அந்த உணவுகள் எல்லாம் வீணானது. புளி சாதம் வேகவில்லை, சாம்பார் சாதம் உப்பு சப்பில்லை என கூறி தொண்டர்கள் அப்படியே வாங்கிய சாதத்தை கொட்டிவிட்டனர்.
இதனால் மாநாட்டில் ஆங்காங்கே சாப்பாடு தட்டுகளில் கொட்டப்பட்ட உணவு இருந்தன. அது போல் அண்டா அண்டாவாக உணவு வீணடிக்கப்பட்டது. இதை சாப்பிட ஆள் இல்லாததால் அப்படியே பூஞ்சை பிடித்து வீணாகிவிட்டது. விழாவுக்கு வந்திருந்தவர்கள் பெரும்பாலானோர் இந்த உணவு நன்றாக இல்லை என கூறிவிட்டனர்.

அதுபோல் ஓபிஎஸ்ஸும் 2 நாளுக்கு முன்னாடி செய்த புளி சாதத்தை பரிமாறியதாக குற்றம்சாட்டியிருந்தார். இந்த உணவு வீணானது குறித்து அங்கிருந்த தொழிலாளி ஒருவர் கூறுகையில் விவசாயி இந்த அரிசியை விளைவிக்க எத்தனை கஷ்டப்படுகிறார். ஆனால் இப்படி உணவு வீணாகியிருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நன்றாக இருந்தால் தொண்டர்கள் நிச்சயம் சாப்பிட்டிருப்பார்கள்.
நன்றாக இல்லாததே உணவு வீணுக்கு காரணம் ஆகும். இனியாவது சமையல் கலைஞர்கள் உணவு வீணாகும் விதத்தில் சமைக்காமல் அனைவரும் சாப்பிட்டு வாழ்த்திவிட்டு செல்லும் அளவுக்கு சமைக்க வேண்டும் என்றார். இந்த நிலையில் சமையல் கலைஞர் ஒருவர் கூறுகையில் நாங்கள் சனிக்கிழமையே உணவு சமைக்க வந்துவிட்டோம். ஞாயிற்றுக்கிழமைதான் மாநாடு.
நாங்கள் 6 ஆயிரம் சமையல்காரர்கள் வந்திருந்தோம். இங்கு புளி சாதம் செய்வதற்கு முதல் நாளே தம் போடப்பட்டு ரெடியாகிவிட்டது. மறுநாள் தாளித்து கொட்டுவது மட்டும்தான் நடந்தது. ஆனால் சாம்பார் சாதமே மதியம் 1 மணிக்குத்தான் தயாரானது. இது சூடாக இருந்ததால் தொண்டர்கள் விரும்பி சாப்பிட்டனர். இதனால் புளி சாதம் வீணானது. இரவு 8 மணிக்கு மாநாடு முடிந்தும் வெளியூர் செல்வோர் 10 மணி வரை சாப்பிட்டுவிட்டு பார்சல் வாங்கி சென்றனர். மற்றபடி உணவு நன்றாகத்தான் இருந்தது. இதை யாருக்காவது கொடுத்திருக்கலாம். ஆனால் இரவு நேரமாகிவிட்டதால் கொடுக்க முடியவில்லை என கூறியுள்ளார்.
மேலும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மதியம் மட்டன் பிரியாணி, சிக்கன் போன்ற உணவுகளை ஏற்பாடு செய்து தொண்டர்கள் சென்ற வாகனத்தில் அனுப்பியதால் மாநாடு திடலில் ஏற்பாடு செய்யப்பட்ட உணவுக்காக எந்த தொண்டர்களும் சாப்பிட முன் வரவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் தான் முன்னேற்பாடாக செய்யப்பட்ட உணவுகள் வீணாகப்பட்டது எனவும் கூறப்படுகிறது