திருச்சி அரியமங்கலம் திடீர் நகர் பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் வந்தது இதனை தொடர்ந்து
திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி ஆலோசனையின்படி, பொன்மலை காவல் உதவி ஆணையர் காமராஜ் தலைமையில் தனிப்படை போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் அரியமங்கலம், பொன்மலை காவல் நிலைய எல்லைகளுக்குட்பட்ட திடீர்நகர், பொன்மலை நார்த்டி குடியிருப்பு எல்லைக்கு விரைந்தனர்.
நார்த்டி, திடீர்நகர் எல்லையில் உள்ள ஆள் அரவமற்ற முட்புதர் பகுதியில் ஒரு அட்டைப்பெட்டியில் 3 நாட்டு வெடிகுண்டுகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் அந்த வெடிகுண்டுகளை கைப்பற்றினர். பின்னர், அந்த வெடிகுண்டுகளை பாதுகாப்பு கருதி மணச்சநல்லூர் எதுமலை பகுதியில் உள்ள ஒரு தனியார் வெடிமருந்து குடோனுக்கு அனுப்பி வைத்தனர். கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகள் மிகவும் சக்தி வாய்ந்தவை என போலீசார் தெரிவித்தனர்.
திருச்சியில் அதிக க்ரைம் ரேட் நிறைந்த காவல் நிலையங்களின் பட்டியலில் அரியமங்கலம், பொன்மலை காவல் நிலையங்கள் முன்னிலையில் உள்ளது. இந்தப்பகுதியில் இரு பெரும் ரவுடி கும்பல்களால் வருடம் தோறும் கொலை, கொள்ளை தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில் தான் ரவுடி கும்பல் ஒன்று வெளிமாநிலத்தில் இருந்து வாங்கி பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகளை போலீஸார் கைப்பற்றி உள்ளனர்.
இந்த பகுதியில் இரு ரவுடிகளுக்கிடையே கோஷ்டி மோதல் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. இதில் ஒரு ரவுடி அவரது எதிரியை தீர்த்து கட்ட அந்த வெடிகுண்டுகளை வாங்கி வந்திருக்கலாம் என கருதப்படுகிறது. போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் திடீர் நகரை சேர்ந்த பிரபல ரவுடியான குட்ட பாலு என்பவர் நாட்டு வெடிகுண்டுகளை வாங்கி வந்து முள்ளுக்காட்டில் பதுக்கி வைத்திருந்ததாக தெரியவந்துள்ளது.
மேலும், ரவுடி குட்டபாலு வேறு ஒரு ரவுடி ஒருவரை மிரட்டுவதற்காகவும், பல்வேறு அடிதடி, கொலை கொள்ளை வழக்கில் தொடர்புடை முன்னாள் அதிமுக பெண் கவுன்சிலர் ஒருவரின் மகனுக்கும் இந்த வெடிகுண்டில் தொடர்பிருப்பதாக தெரியவந்திருக்கின்றது. இதைத்தொடர்ந்து குட்ட பாலு மீது போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவாகி இருக்கும் ரவுடியை வலைவீசி தேடி வருகின்றனர்.
திருச்சியில் நாட்டு வெடிகுண்டு கைப்பற்றப்பட்ட சம்பவம் அரியமங்கலம் மற்றும் பொன்மலை பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து பொன்மலை, அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.