திருச்சியை மாவட்டம், திருவெறும்பூர் அருகே கிருஷ்ணசமுத்திரத்தை சேர்ந்தவர் சப்பாணி. இவர் கடந்த 2016-ம் ஆண்டு இவரது நண்பரான வேங்கூரை சேர்ந்த தங்கதுரை மற்றும் அதே பகுதியை சேர்ந்த தேக்கன், விஜய் விக்டர் உள்பட 8 பேரை பணம், நகைக்கு ஆசைப்பட்டு கொலை செய்து புதைத்தார்.
திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சப்பாணியை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் சப்பாணி கொலை செய்தவர்களின் உடல்களை கிருஷ்ணசமுத்திரம் பகுதியில் உள்ள வயல்வெளியில் புதைத்ததாக போலீசாரிடம் கூறினார். இதையடுத்து அவரை அழைத்து சென்ற போலீசார், கொலை செய்து புதைக்கப்பட்டவர்களின் உடல்களை தோண்டி எடுத்து அதே இடத்திலேயே மருத்துவர்கள் மூலம் பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். பின்னர் தோண்டி எடுக்கப்பட்ட உடல்கள் மீண்டும் புதைக்கப்பட்டன. சப்பாணி ஒவ்வொருவரிடமும் நட்பாக பேசி அவர்களை தனியாக அழைத்து சென்று யாரும் எதிர் பார்க்காத நேரத்தில் இந்த கொடூர கொலையை அரங்கேற்றியது தெரியவந்தது.
மேலும், அன்றைய காலகட்டத்தில் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கடந்த 1 ஆம் தேதி தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அன்று நீதிபதி பாபு தீர்ப்பை 7ம் தேதி ஒத்தி வைத்தார்.
இன்று காலை சப்பாணியை திருச்சி மத்திய சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் போலீசார் கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர்.
தீவிர விசாரணை நடத்திய நீதிபதி கே.பாபு இந்த வழக்கின் குற்றவாளியாக சப்பாணியை உறுதி செய்தார். மேலும் 8 பேரை கொலை செய்த சப்பாணி மீது 4 பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் 364, 394 இரு பிரிவுகளுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை, மற்றொரு 201 பிரிவுக்கு 3 சிறைதண்டனை, நான்காவது பிரிவான 302 வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.
நடிகர் வேல்முருகன்.
சாப்பனியின் சைக்கோ கொலை சம்பவங்களை வைத்து திருச்சியை சேர்ந்த நடிகர் வேல்முருகன் போலீஸ் வேடத்தில் நடித்து சமீபத்தில் விலங்கு என்ற வெற்றி திரைப்படம் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.