தமிழக முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக நேற்று காலை திருச்சி வந்தடைந்தார். நேற்று திருச்சி கருமண்டபம் பகுதியில் நடைபெற்ற திமுக மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அதன் பின்னர் திருச்சியில் தங்கி ஓய்வெடுத்த அவர் இன்று காலை தமிழ்நாடு அரசின் உழவர் நலத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வேளாண் சங்கமம் 2023 விழாவை திருச்சி கேர் கல்லூரியில் துவக்கி வைத்தார்.
அதன் பின்னர் தஞ்சையில் பந்தல் சிவாவின் இல்ல நிகழ்வு மற்றும் தஞ்சை மாநகரில் அரசின் நலத்திட்டங்களை துவக்கி வைக்க திருச்சியில் இருந்து கார் மூலம் தஞ்சை சென்றார். முதல்வரின் சொகுசு கார் திருச்சி மாவட்ட எல்லையான புதுக்குடிக்கும் துவாக்குடிக்கும் இடையே செல்லும்போது திடீரென பஞ்சர ஆனது.
துவாக்குடி பேருந்து நிலையம் கடந்தபோது திடீரென அவரது காரின் பின்பக்க டயர் பஞ்சரானது. இதனை உணர்ந்த கார் ஓட்டுநர் உடனடியாக காரை ஓரமாக நிறுத்தியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
முதல்வரின் அணிவகுப்பில் அவரைத் தொடர்ந்து வந்த அமைச்சர் கே.என்.நேரு, முதல்வரின் கார் பஞ்சரானதைக் கண்டு பதறிப் போய் உடனடியாக இறங்கி ஓடிவந்தார்.
காரில் இருந்த முதல்வரை இறக்கி தனது காருக்கு பக்குவமாக பாதுகாப்புடன் அழைத்துச் சென்றார். நேருவின் காரில் ஏறிய முதல்வர் தனது தஞ்சை பயணத்தைத் தொடர்ந்தார்.
நடுவழியில் நின்ற முதல்வரின் காருக்கு அதிகாரிகள் விரைந்து வந்து 20 நிமிடங்களில் டயரை மாற்றி தஞ்சை நோக்கி எடுத்துச் சென்றனர்.
தமிழக முதல்வரின் கார் கான்வாயில் செல்லும்போது நடுவழியில் பஞ்சர் ஆகி நின்றதால் பாதுகாப்பு மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழக முதல்வரின் நவீன சொகுசு கார். டியூப்லெஸ் டயர்பஞ்சர் ஆனால் குறைந்தபட்சம் 30 கிலோமீட்டர் கடந்து விடலாம் என கூறப்படுகிறது,இந்நிலையில் முதல்வர் கார் பஞ்சரானது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.