காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் பாரம்பரிய விளையாட்டுக்களுடன் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்ட காமராஜ் பிறந்தநாள் விழா.
காருகுடி பள்ளியில் களைகட்டிய காமராஜர் பிறந்த நாள் விழா
இன்று
தா.பேட்டையை அடுத்த காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் காமராசர் பிறந்த நாள் விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை ,ஓவியம் ,
கவிதை எழுதுதல், வாசகம் எழுதுதல், கவிதை ஒப்புவித்தல், நடனம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.
விழாவை பத்தாம் வகுப்பு மாணவர்கள் ஒருங்கிணைந்தனர்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் கீதா தலைமை ஏற்று தலைமை உரையாற்றினார் .
பள்ளியின் ஆசிரியர் தேவ சுந்தரி அனைவரையும் வரவேற்றார். ஆசிரியர்கள் சித்ரா ,நிர்மலா ,
சத்யா ,சரவணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஆசிரியர் தண்டபாணி நன்றி கூற மாணவர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு காலை நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.
மாலையில்
“பாரம்பரியத்தை மீட்டெடுப்போம் ”
என்ற தலைப்பில் பள்ளியின் தலைமை ஆசிரியரால் ஒருங்கிணைக்கப்பட்ட மறந்து போன விளையாட்டுக்களான பல்லாங்குழி, கோழி குண்டு, பம்பரம் ,கிட்டிப்புள் ,
பச்சைக் குதிரை, சில்லாக்கு, தாயம் , சிறு குச்சியை மண்ணுக்குள் புதைத்து வைத்து விளையாடும் கிச்சு கிச்சு தாம்பூலம் ,கண்ணாமூச்சி, டயர் ஓட்டுதல் போன்ற விளையாட்டுக்களில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
இந்த விளையாட்டுகளில் பல விளையாட்டுக்கள்
இன்றைய மாணவர்களுக்குப் புதுமையாக இருந்தது. குறிப்பாக பல்லாங்குழி , தாயம் , கிட்டிப்புள் போன்றவைகளை இதுவரை பார்த்ததில்லை என்று பலர் தெரிவித்தனர். இனி இந்த வகையான விளையாட்டுகளைத் தொடர்ந்து விளையாடுவோம் என்றும் மகிழ்ச்சியுடன் பதிவு செய்தனர். காலையில் தனித்திறன்களை வளர்க்கும் விதமாகவும் மாலையில் மகிழ்ச்சியோடு விளையாடும் விதமாகவும் கொண்டாடப்பட்ட காமராஜரின் பிறந்தநாள் விழாவைப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரும் பள்ளி மேலாண்மைக் குழு குழு உறுப்பினர்களும்
ஊர்ப் பொதுமக்களும் வெகுவாகப் பாராட்டினர்.