திருச்சியில் ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகியை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற 5 பேர் கொண்ட கும்பலை போலீஸார் கைது செய்தனர்.
திருச்சி, அரியமங்கலம், அம்மாக்குளம் பகுதியை சேர்ந்தவர் ர. முகமது தௌபிக்ராஜா (வயது 24). இவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின், அம்மாகுளம் பகுதி கிளை செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.
வியாழன் அன்று இவர் இரவு அரியமங்கலம் பகுதியில் நின்றிருந்தபோது, திடீரென சுமார் 10 பேர் கொண்ட கும்பல் அரிவாளுடன் அவரை சுற்றி வளைத்து, கொலை செய்யும் நோக்கில் சரமாரியாக வெட்டியுள்ளனர். உடல், தலை, கைகள் என சுமார் 10 இடங்களில் வெட்டு விழுந்த நிலையில் அலறியபடி ரத்தவெள்ளத்தில் அவர் விழுந்ததும் மர்மக்கும்பல் தப்பியோடிவிட்டது.
பின்னர் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து அரியமங்கலம் காவல் ஆய்வாளர் திருவந்தம் தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக தௌபீக்ராஜா செயல்பட்டு வந்ததால், அதை பிடிக்காத மர்மக்கும்பல் அவரை கொலை செய்யும் நோக்குடன் வெட்டிச் சாய்த்தது தெரியவந்தது. இதனையடுத்து அரியமங்கலம் முல்லைநகர் பகுதியைச் சேர்ந்த ப. நிஷாந்த் என்கிற பன்னீர்செல்வம் (23), அம்மாகுளம் பகுதி எல். ஆசைமுத்து (24), காந்திஜி தெரு ஆ.சந்தோஷ்குமார் (20), செ.பாலாஜி (20), உக்கடை திருப்பூர குமரன் தெருவைச் சேர்ந்த ரா.ரெங்கா என்கிற ரங்கநாதன் (19) உள்ளிட்ட 5 பேரை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில் மேலும் 17 வயது சிறுவன் ஒருவரையும் பிடித்து சிறார் கூர்நோக்கு இலத்தில் அடைத்தனர். மேலும் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய கோரி, ஜனநாயக வாலிபர் சங்க திருச்சி மாவட்ட தலைவர் லெனின் தலைமையில், வியாழக்கிழமை நள்ளிரவு திருச்சி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.