திருச்சியில் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக, சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக, சில ரயில்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாதானதால் ரயில் நிலையத்தில் முற்றுகைப் போராட்டம் மேற்கொண்டனர்.
திருச்சி ரயில்வே கோட்டத்தில், ஆங்காங்கே தண்டவாளம் மற்றும் சிக்னல்கள் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதாகவும், இதனால் சில ரயில்கள் முழுவதுமாகவும், சில ரயில்கள் பாதி தொலைவுமட்டும் இயக்கப்பட்டு பகுதியாகவும் ரத்துசெய்யப்படும் எனவும், சில ரயில்கள் குறிப்பிட்ட சில ரயில் நிலையங்களில் நின்று தாமதமாக புறப்பட்டுச் செல்லும் எனவும் ரயில்வே சார்பில் அறிவிப்புகள் வெளியாகி வருவது தொடர்ந்துள்ளன.
இந்நிலையில், மயிலாடுதுறையிலிருந்து தஞ்சாவூர், திருச்சி,மதுரை வழியாக செங்கோட்டை வரை செல்லும் பயணிகள் விரைவு ரயில்
(“ஃ பாஸ்ட் பாசஞ்சர்) திங்கள்கிழமை காலை சுமார் 11 மணிக்கு புறப்பட்டு பகல் 1.30 மணியளவில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ரயில் நிலையத்தை வந்தடைந்தது.
பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் சுமார் அரை மணி நேரம் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டதையடுத்து பயணிகளில் சிலர் ரயில் நிலையத்தில் இறங்கியும் பலர் ரயிலிலேயே அமர்ந்தும் இருந்தனர்.
ஆனால் குறிப்பிட்டபடி ரயில் அரை மணி நேரம் கழித்துப் புறப்படவில்லை. இந்த ரயிலுக்கு பின்னர் வந்த குருவாயூர், சோழன் உள்ளிட்ட மேலும் இரு ரயில்களும் இதேபோல ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் காத்திருந்த, செங்கோட்டை ரயில் பயணிகள், சுமார் ஒன்றரை மணி நேரமாகியும் புறப்படாததால் ஆத்திரமைடந்தனர். இதில் விமானத்தைப் பிடிக்கச்செல்லும் பயணிகள் சிலரும், சர்க்கரை நோயுள்ள பயணிகள் சிலரும் மிகுந்த அவதிக்குள்ளாயினர். இதனையடுத்து பயணிகள் சிலர் ரயில் நிலைய மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் மேற்கொண்டனர்.
இதன் பின்னர் பிற்பகல் 3.15 மணிக்குப் பின்னர் ரயில்கள் ஒவ்வொன்றாக இயக்கப்பட்டன.