திருச்சியில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் பாஜகவினர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தனர்.அதில் கூறி இருப்பதாவது:
ஸ்ரீரங்கம் வட்டம் பேட்டைவாய்த்தலை தலைப்பிலிருந்து சிறுகமணி, பெருகமணி, திருப்பராய்த்துறை வழியாக கோயிலூா் வரை புது அய்யன் வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் மூலம் 1,600 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன.
கடந்த காலங்களில் நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணிகளின்போது பேட்டைவாய்த்தலையில் வாய்க்காலின் தலைப்பானது பாதிக்கப்பட்டது. கடந்த 2019-ஆம் ஆண்டு தனியாா் பாலங்கள் போன்ற ஆக்கிரமிப்புகளால் தண்ணீா் வரத்து தடைபட்டுள்ளது. ஆகவே, மாவட்ட ஆட்சியா் நேரிடையாகத் தலையிட்டு புதுஅய்யன் வாய்க்காலின் ஆக்கிரமிப்புப் பகுதிகளை முறையாக நில அளவை செய்து, அத்துக்கல் நட்டு, ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி தூா்வாரி, பாசனத்துக்கு வழிவகை செய்ய வேண்டும் என அம்மனுவில்
கூறப்பட்டுள்ளது.
மனு அளித்த போது பாஜக நிர்வாகிகள் ஏராளமானோர் உடன் இருந்தனர்.