தாப்பேட்டை அருகே
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு;
10 ம் வகுப்பு மாணவி தூக்கு போட்டு தற்கொலை.
திருச்சி மாவட்டம் தாப்பேட்டை வடக்கு குறும்பர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார்.
இவரது மனைவி சுபாஷினி (வயது 38). இவர் முசிறி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியருக்கு 15 வயதில் ஒரு மகள் இருந்தார்.
இவர் துறையூர் திருத்தலையூர் பொன்னர் சங்கம் பட்டி பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் (தாயின் அம்மா) தங்கி அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் எஸ்எஸ்எல்சி படித்து வந்தார்.
இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த டிப்ளமோ படிக்கும் 17 வயது சிறுவன் ஒருவனுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. இது பற்றி தகவல் அறிந்த மாணவியின் தாயார் அதிர்ச்சி அடைந்தார்.
மகளிடம் காதலை கைவிடுமாறு வற்புறுத்தினார். இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு மாணவிக்கு பிறந்தநாள் வந்தது.
அப்போது காதலன் அந்த மாணவியுடன் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ளார்.
இதனை அறிந்த சுபாஷினி மகளை மீண்டும் கண்டித்தார்.
இதனால் மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளான அந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஃபேன் கொக்கியில் தனது தாயின் சேலையில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருந்த போதிலும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று நள்ளிரவு அந்த மாணவி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சுபாஷினி தாப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் 10ம் வகுப்பு மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.