திருவானைக்காவலில் பரிதாபம்:
அளவுக்கு அதிகமான மாத்திரைகள் தின்று முதியவர் சாவு
மற்றொரு சம்பவத்தில் பெற்றோர் திட்டியதால் வாலிபரும் உயிரை மாய்த்தார்.

திருவானைக்காவலில் அளவுக்கு அதிகமான மாத்திரைகள் தின்ற முதியவர் பரிதாபமாக இறந்தார். மற்றொரு சம்பவத்தில் பெற்றோர் திட்டியதால் எலி மருந்து சாப்பிட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
முதியவர் சாவு
திருவரங்கம் திருவானைக்காவல் பர்மா காலனியைச் சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 72). வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட இவர் அதற்கு மருந்து மாத்திரைகள் எடுத்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று தியாகராஜன் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை தின்றார். உடனே மயங்கி அவரை உறவினர்கள் மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர் .ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து திருவரங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
எலி மருந்து சாப்பிட்டு வாலிபர் தற்கொலை
திருச்சி எடத்தெரு ரோடு பிள்ளை மாநகரை சேர்ந்தவர் சுரேஷ் கொத்தனார் இவரது மகன் நெல்ராஜ் (வயது 19 ).இவர் வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதை அவரது தந்தை சுரேஷ் கண்டித்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த நெல்ராஜ் எலிமருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். உடனே அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் .அங்கு தீவிர சிகிச்சை அளித்தும், நெல்ராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து காந்தி மார்க்கெட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சோனியா காந்தி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.