ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பொன்மலை பகுதி செயலாளர் கொட்டபட்டு தர்மராஜ் ஏற்பாட்டில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்.
சட்டமன்றத்தைப் போல
பாராளுமன்றமும் திமுகவினுடையது என உறுதியேற்கும் நாளாக இந்த நாள் அமையட்டும்
திருச்சி திமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேச்சு.
திருச்சி தெற்கு மாவட்டம், கிழக்கு மாநகரம், பொன்மலை பகுதி தி.மு.க சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி சுப்பிரமணியபுரம் (பழைய மார்க்கெட்) மெயின் ரோட்டில் தி.மு.க. பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பகுதி செயலாளரும்,திருச்சி மாநகராட்சி நகரமைப்புக்குழு தலைவருமான இ.எம்.தர்மராஜ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு,அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தலைமைக் கழக பேச்சாளர் நெல்லிக்குப்பம் புகழேந்தி, திருச்சி கிழக்கு மாநகர செயலாளரும்,திருச்சி மாநகராட்சி மண்டல குழு தலைவருமான மதிவாணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:-
மக்களுக்காக போராடி சிறை சென்றவர்கள் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் ஸ்டாலின்.
மக்களுக்காக உழைக்க,மக்களின் கட்டளையை செயல்படுத்த நாங்கள் காத்திருக்கிறோம்.
மிக விரைவில் இந்தியாவை பாசிச சக்தியிலிருந்து மீட்டெடுப்பதற்கு உறுதியளிக்கும் கூட்டமாக எப்படி தேசிய கட்சி தலைவர்கள் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கூட்டம் அமைந்ததோ, அதேபோல் இக்கூட்டம் இருக்க வேண்டும் என்பதை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இன்றைக்கு மட்டுமல்ல, என்றைக்கும் சட்டமன்றம் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடையது , நாடாளுமன்றமும் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடையது என உறுதி ஏற்கும் இந்த நாள் அமையட்டும்.
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ கே.என்.சேகரன், நிர்வாகிகள் லீலா வேலு, அ.த.த.செங்குட்டுவன், மூக்கன், மண்டல குழுதலைவர் ஜெயநிர்மலா, முருகானந்தம், தமிழ்செல்வம், கோவிந்தன்.பொன்னுச்சாமி, வரதராஜன், உஷாராணி, கோவி.நாகராஜன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். கூட்ட முடிவில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. முடிவில் வட்டச் செயலாளர்கள் நாகவேணி மாரிமுத்து, மனோகர், ஜமால் முகமது ஆகியோர் நன்றி கூறினர்.