ஸ்ரீரங்கத்தில் ரூ.15.55 கோடி செலவில் தொடங்கப்பட்ட ஸ்டெம் பூங்கா வாசலில் உள்ளகுப்பை தரம் பிரிக்கும் கூடத்தை அகற்ற கோரி மநீம கிஷோர் குமார் வலியுறுத்தல்.
திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்டெம் பூங்கா அருகே
மாநகராட்சி நுண்ணூட்ட உர மையம்
இடம் மாற்ற ம நீ ம கட்சி வலியுறுத்தல்.
திருச்சி ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டெம் பூங்கா அருகே, மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள குப்பைகள் தரம்பிரிக்கும் நுண்ணூட்ட உர செயலாக்க மையத்தை இடம் மாற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இயற்பியலில் நோபல் பரிசு பெற்றவரும், திருச்சியைச் சேர்ந்தவருமாந விஞ்ஞானி சி.வி.ராமனை கௌரவிக்கும் வகையில், அவரது பெயரில் திருச்சி, ஸ்ரீரங்கம் யாத்திரி நிவாஸ் அருகே பஞ்சக்கரை சாலையில், பொலிவுறு நகரத் ( ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் ரூ.15.55 கோடி மதிப்பீட்டில் ஸ்டெம் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.

பூங்காவை டிசம்பர் 29 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
12.500 சதுர மீட்டர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்காவில், மாணவர்கள் தங்களது அறிவுத்திறனை வளர்த்துக்கொள்ளும் வகையில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் சார்ந்த 188 உபகரணங்கள் அமைக்கப் பட்டுள்ளன. மேலும், குளிரூட்டப்பட்ட 40 இருக்கைகள் கொண்ட டிஜிட்டல் விண்வெளி கோளரங்கம், 140 இருக்கைகள் கொண்ட கலையரங்கம் மற்றும் திரையரங்கம், விளையாட்டு சாதனங்கள், சிற்றுண்டிச்சாலை மற்றும் கழிவறைகளும் அமைக்கப்பட்டுள்ளன .
ஆனால் பல கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட இந்த ஸ்டெம் பூங்கா முகப்பு பகுதியில் திருச்சி மாநகராட்சியின் குப்பை தரம் பிரிக்கும் மற்றும் நுண்ணூட்ட உர மைய்யம் ஏற்கெனவே கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அப்பகுதியில் துற்நாற்றத்தோடு, கொசுக்களும் அதிகமாக உள்ளன. பூங்காவில் கட்டணம் கொடுத்து விளையாட வரும் சிறுவர், சிறுமிய எளிதில் நோய் தொற்று ஏற்படவும் வாய்ப்புள்ளது.
பொதுமக்களின் வரி பணத்தில் தொடங்கப்பட்டுள்ள நல்ல திட்டம் அதன் இலக்கை அடைய முடியாமல் போகவும் வாய்ப்புள்ளது. எனவே இக்குப்பை தரம்பிரிக்கும் மையத்தை இடம் மாற்ற வேண்டும் என மக்கள் நீதிமய்யம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அக்கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ரா.கிஷோர்குமார் இது தொடர்பாக மாநகராட்சியை வலியுறுத்தியுள்ளார்.