துறையூரில் கடனை திருப்பித் தர முடியாத நிலையில் கால்நடை வியாபாரி தூக்கு போட்டு தற்கொலை.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கோட்டத்தூர் குடித்தெரு பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 43).
இவர் ஊர் ஊராக சென்று கால்நடை வளர்ப்போரிடம் ஆடு, மாடுகளை வாங்கி சந்தையில் விற்பனை செய்து வந்தார். மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரில் கறிக்கடையும் நடத்தி வந்தார்.
இதில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடன் கொடுத்தவர்கள் துறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்போது செல்வகுமார் சில வாரங்களில் கடனை திருப்பி செலுத்துவதாக உறுதி அளித்தார். இருந்த போதிலும் அவரால் கடனை திருப்பி செலுத்த இயலவில்லை. இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு கடன் கொடுத்த 3 பேர் வீட்டில் வந்து அக்கம் பக்கத்தினர் முன்னிலையில் திட்டி விட்டு சென்றதாக தெரிகிறது.
இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளான செல்வகுமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கயிற்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்த செல்வகுமாருக்கு தங்கமணி என்ற மனைவியும் லோகேஸ்வரன் (வயது15) என்ற மகனும் செல்வராணி (வயது14) என்ற மகளும் உள்ளனர்.
இது தொடர்பாக துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.