கடை வராண்டாவில் இடம் பிடிப்பதில் போட்டி
ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் கல்லால் தாக்கி கொலை
கட்டிடத் தொழிலாளி கைது.
திருச்சி உய்யக்கொண்டான் திருமலை பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி (வயது 60). இவர் திருச்சி ஆல் இந்திய ரேடியோ நிலையத்தில் தோட்டத் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.
பின்னர் சில ஆண்டுகளுக்கு முன்பு விருப்ப பணி ஓய்வு பெற்றார்.
அதன் பின்னர் மனைவியுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் திடீரென அவரது மனைவி இறந்து விட்டதாக கூறப்படுகிறது.
அதன் பின்னர் சிறிது காலம் திருமணமான மகளின் வீட்டில் தங்கியிருந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகளின் வீட்டிலிருந்து வெளியேறினார்.
பின்னர் ஸ்ரீரங்கம் கிழக்கு சித்திரை வீதி பகுதியில் கோவில்களில் அன்னதானம் வாங்கி சாப்பிட்டு விட்டு கடை வராண்டாவில் படுத்து தூங்கி வந்தார்.
இங்கு வேறு சிலரும் இரவு படுத்து தூங்குவார்கள்.
ஈரோடு மாவட்டம் பவானி பகுதியைச் சேர்ந்த முருகேசன் (வயது 39) என்பவர் கட்டிட வேலைக்கு சென்று விட்டு இதே பகுதியில் கடை வராண்டாவில் படுத்து தூங்கி வந்தார்.
இதில் இடம் பிடிப்பதில் நேற்று நள்ளிரவு கந்தசாமிக்கும் முருகேசனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதில் ஆத்திரமடைந்த முருகேசன் அங்கு கிடந்த சிமெண்ட் கான்கிரீட் கல்லை தூக்கி அவரின் தலையில் ஓங்கி அடித்ததாக கூறப்படுகிறது. இதில் மண்டை உடைந்து இரத்த வெள்ளத்தில் கந்தசாமி துடிதுடித்து சம்பவ இடத்தில் இறந்து விட்டார். பின்னர் முருகேசன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது பற்றி தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று கந்தசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் தப்பி ஓடிய முருகேசனை கைது செய்தனர்.கடை வராண்டாவில் இடம் பிடிப்பதில் ஏற்பட்ட போட்டியில் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஸ்ரீரங்கத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.