திருச்சி நீதிமன்றம் அருகில்
ஆக்கிரமித்து இருந்த 10 கடைகள் அகற்றம்
மாநகராட்சி அதிரடி நடவடிக்கை.
திருச்சி நீதிமன்றம் அருகில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த 10 கடைகளை அதிரடியாக மாநகராட்சி இன்று அகற்றியது.
திருச்சி மாவட்ட நீதிமன்றம் கொரோனா காலத்தில் வழக்கறிஞர்கள் புகார் தாரர்கள் நேரில் ஆஜராவதற்கு விலக்கு அளிக்கப்பட்டதுடன், வழக்கறிஞர்கள் மட்டுமே நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
அதேநேரம் நீதிமன்ற வளாகத்தினுள் செயல்பட்டு வந்த பத்திரங்கள் மற்றும் முத்திரைத்தாள் விற்பனையானது நீதிமன்றத்திற்கு வெளியே தற்காலிகமாக விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கொரோனா முடிந்தும் அந்த கீற்றுக் கொட்டகை அகற்றப்படாமல் நீதிமன்றத்தின் அழகையும், சுகாதாரத்தையும் கெடுக்கும் வகையில் நீதிமன்றத்தின் முன்புறம் உள்ள பத்திரம் மற்றும் முத்திரைத்தாள் விற்பனை செய்யும் நிலையங்கள் செயல்படுவதாக திருச்சி மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தினர் குற்றம் சாட்டினர்.
இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் மற்றும் மேயர் உள்ளிட்டோரை சந்தித்து மனு அளித்தும் 4 மாதகாலம் ஆகியும் இதுவரையிலும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் வேதனையுடன் தெரிவித்தனர். மேலும் அந்த கீற்றுக் கொட்டகையில் மது அருந்துவது, கஞ்சா புகைப்பது போன்ற சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாகவும் மேலும் பொதுமக்களுக்கு மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மேலும் நீதிமன்றத்திற்கு வரும் நீதிபதிகள் மற்றும் வழக்காடிகள், பொதுமக்கள் பலரும் சிரமத்திற்கு உள்ளாக்கும் வகையில் உள்ள கீற்று கொட்டகையினை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர், மேலும் நீதி மன்றம் சாலைகளை சீரமைக்க வேண்டும் என்றும் திருச்சி மாநகராட்சிக்கு மீண்டும் கோரிக்கை விடுத்தனர்.இந்நிலையில் திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் இன்று காலையில் நீதிமன்றம் அருகில் உள்ள அனைத்து கடைகளுக்கும் நேரடியாக சென்று ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுமாறு கேட்டுக் கொண்டனர் இதை அடுத்து வியாபாரிகள் ஆக்கிரமிப்பு கொட்டகைகளை அகற்றினர்.
மாநகராட்சி அதிகாரிகளின் அதிரடி உத்தரவால் கடைகள் அகற்றப்பட்ட சம்பவத்தால் திருச்சி நீதிமன்றம் அருகில் இன்று சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்து திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்கத்தின் உடைய செயலாளர் மதியழகன் நிருபர்களிடம் கூறுகையில்போக்குவரத்துக்கு இடையூறு உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து மாநகராட்சி இடம் மனு அளித்தோம் மாநகராட்சி அதிகாரிகள் இன்று உரிய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதற்காக மாநகராட்சி மேயர், கமிஷனர் துணை மேயர் மற்றும் அதிகாரிகளுக்கும், வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறினார்.