திருச்சி
ஜங்ஷன் பகுதி
அ.தி.மு.க. செயலாளர், வார்டு நிர்வாகி மீது மோசடி வழக்கு.
உள்ளாட்சித் தேர்தலில் பணம் வாங்கிக் கொண்டு சீட்டு தர மறுத்ததாக புகார்.
திருச்சி கலெக்டர் அலுவலக ரோடு பர்மா காலனி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 49 )கட்டிட ஒப்பந்ததாரரான இவர் திருச்சி மாநகர 54 வது வார்டு அ.தி.மு.க. துணை செயலாளராகவும் இருக்கின்றார்.
இவர் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது, ஜங்ஷன் பகுதி அதிமுக செயலாளர் நாகநாதபாண்டியின் வற்புறுத்தலின் பேரில் 54 வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட மனு தாக்கல் செய்ததாக கூறப்பட்டது.
ஆனால் கட்சித் தலைமை 52 வது வார்டு அ.தி.மு.க. செயலாளர் கதிரேசனை அறிவித்தது. இந்த நிலையில் கடந்த ஜனவரி 29ம் தேதி நாகநாதர், துணைச் செயலாளர் சுப்பிரமணியம், கதிரேசன் ஆகிய இருவரையும் அழைத்து பேசியுள்ளார்.
அப்போது சுப்பிரமணியனிடம் நீங்கள் ரூ. 5 லட்சம் கொடுத்தால், கதிரேசன் தனது வேட்பு மனுவை வாபஸ் பெறுவார் என உறுதி அளித்தார்.

இதனை நம்பிய சுப்பிரமணியன் முதற்கட்டமாக ரூ. 1 லட்சத்தை நாகநாதர் பாண்டியிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
ஆனால் கதிரேசன் வேட்பு மனுவை வாபஸ் பெறவில்லை.
அதைத்தொடர்ந்து சுப்பிரமணியன் நாகநாதர் பாண்டியிடம் சென்று தான் கொடுத்த ரூ.1 லட்சம் பணத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளார்.
அப்போது நாகநாதர் பாண்டி அவரின் ஜாதிப் பெயரைக் குறிப்பிட்டு திட்டியதுடன், கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என மிரட்டி பணத்தை கொடுக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட சுப்பிரமணியன் சம்பந்தப்பட்ட நாகநாதர் பாண்டி மற்றும் கதிரேசன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் புகார் மனு அளித்தார்.
பின்னர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி கண்டோன்மெண்ட் போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் மோசடி பிரிவுகளின் கீழ் ஜங்ஷன் பகுதி அ.தி.மு.க. செயலாளர் நாகநாதர் பாண்டி மற்றும் வார்டு செயலாளர் கதிரேசன் ஆகியோர் மீது வழக்கு 4 பிரிவுகளின் கீழ் பதிவு செய்தனர்.
இது தொடர்பாக உதவி போலீஸ் கமிஷனர் அஜய் தங்கம் விசாரணை நடத்தி வருகிறார்.
தற்போது இந்த வழக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.