திருச்சியில் சாலைகளை சீரமைக்க துரித நடவடிக்கை எடுக்கப்படும்.புதிய மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் பேட்டி.
திருச்சி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக மா.பிரதீப் குமார் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
பின் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது அவர் கூறியதாவது:-
குறைதீர்ப்பு முகாம்களில் மக்கள் அளிக்கும் மனுக்களை தீர ஆராய்ந்து விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன்.
திருச்சி பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர் ,தெருவிளக்கு, சாலை மற்றும் விவசாயம், மருத்துவம், கல்வி ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.
அதுமட்டுமல்லாமல் ஒருங்கிணைந்த தமிழக அரசின் கலைஞரின் வேளாண் வளர்ச்சித் திட்டம், அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் , நமக்கு நாமே திட்டம், வீடு தேடி மருத்துவம், எண்ணும் எழுத்தும் ஆகிய திட்டங்களில் மாநிலத்தில் முதன்மை மாவட்டமாக திருச்சியை கொண்டுவர பாடுபடுவேன்.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களில் பட்டா மாறுதல் மற்றும் வாரிசுசான்றிதழ் கொடுப்பதற்கு காலதாமதம் ஆகிறது அதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.அதில் கவனம் செலுத்தப்படும்.
திருச்சியை பொருத்தமட்டில் 52 நில அளவையர் மட்டுமே இருக்கின்றார்கள். இதனால் காலதாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தற்போது கிராம நிர்வாக அலுவலர்களும் நிலத்தை அளக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
அது நடைமுறைக்கு வரும்போது சப் டிவிஷன் பட்டா விரைந்து வழங்க முடியும்.
நான் ஒரு கெமிக்கல் என்ஜினீயரிங் பட்டதாரி. முதலில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் பணியாற்றினேன். பின்னர் அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஐஏஎஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்று தூத்துக்குடியில் உதவி கலெக்டராகவும், கும்பகோணத்தில் சப் கலெக்டராகவும், கஜா புயல் நிவாரணப் பணிகளில் கூடுதல் திட்ட இயக்குனராகவும், ராமநாதபுரம் மாவட்டத்தில் கூடுதல் ஆட்சியர் ஆகவும் பணியாற்றியிருக்கிறேன்.
எனது சொந்த ஊர் சென்னை. ஐஏஎஸ் ஆன பின்னர் நான்கு ஐந்து மாவட்டங்களில் பணியாற்றிய அனுபவம் இருக்கின்றது.
திருச்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் தாமதமாக நடப்பதாக சொல்கிறார்கள். ஏற்கனவே குடிநீர் வடிகால் வாரியத்தில் பணியாற்றிய அனுபவம் இருக்கின்றது. ஆகவே ஒப்பந்ததாரர்கள் மற்றும் என்ஜினியர்களை அழைத்து பாதாள சாக்கடைக்கு தோண்டிய குழிகளை மூடி சாலைகளை சீரமைக்க துரித நடவடிக்கை எடுக்கப்படும்.
என புதிய மாவட்ட ஆட்சியராக பதவி ஏற்றபின் அவர் கூறினார்.