“நீரின்றி அமையாது உலகு”என்ற முழக்கத்தோடு காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று உலக தண்ணீர் தினம் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
விழாவிற்குத் தலைமை ஏற்ற பள்ளியின் தலைமை ஆசிரியர் கீதா நீர் மேலாண்மை பற்றியும் நீரை சேமிக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் எடுத்துரைத்தார்.
வாழ்த்துரை வழங்கிய ஆசிரியைகள் தேவ சுந்தரி மற்றும் நிர்மலா ஆகியோர் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப நீர் ஆதாரங்கள் போதுமானதாக இல்லாத காரணத்தால் செல்வத்தைப் போல தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். சிறப்புரையாற்றிய ஆசிரியர் தண்டபாணி அவர்கள் உலகத்தின் இயக்கத்திற்கு நீரே ஆதாரமாக விளங்குவதால் அதனைப் பாதுகாக்க வேண்டும் என்று எடுத்துரைத்தார்.
உலக தண்ணீர் தினத்தை ஒட்டி “நீரின்றி அமையாது உலகு” என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி கட்டுரைப் போட்டி ஓவியப்போட்டி ஆகியவை நடத்தப்பட்டன .வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்குப் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக “தண்ணீரை வீணாக்க மாட்டோம் :
தண்ணீரை மாசு படுத்த மாட்டோம் : தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தி சிறப்பாக வாழ்வோம்” என்ற உறுதிமொழி அனைவராலும் எடுக்கப்பட்டது.
சுற்றுச்சூழலுக்கு அடிப்படையாக விளங்கும் நீர் மேலாண்மை பற்றி மாணவர்களுக்கு வலியுறுத்தியதை பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரும் பள்ளி மேலாண்மைக் குழுவினரும் வெகுவாகப் பாராட்டினர்.