மராட்டிய மாநிலம் மும்பையின் மவுளண்ட் பகுதியில் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், அந்த நிதி நிறுவனத்திற்குள் நேற்று மாலை 3.30 மணியளவில் முகக்கவசம்(மாஸ்க்) அணிந்த கும்பல் ஒன்று வந்தது. அந்த கும்பல் துப்பாக்கியை காட்டி மிரட்டி நிதி நிறுவனத்தில் இருந்த பணத்தை தரும்படி நிதி நிறுவன ஊழியர்களிடம் கேட்டனர்.
இதனால், அதிர்ச்சியடைந்த நிதி நிறுவன ஊழியர்கள் அலுவலகத்தில் இருந்த 77 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையர்களிடம் கொடுத்தனர்.
கொள்ளையர்கள் மாஸ்க் அணிந்து நிதிநிறுவனத்திற்குள் வருவதும், ஊழியர்களை மிரட்டி கொள்ளையில் ஈடுபட்டதும் அலுவலகத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
பின் கொள்ளையர்கள் கொள்ளையடித்த பணத்துடன் நிதிநிறுவனத்தை விட்டு வெளியேறி தப்பிச்சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து மவுளண்ட் போலீசார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பட்டப்பகலில் நிதி நிறுவனத்தில் துப்பாக்கிமுனையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

