சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, நேற்று நள்ளிரவு முதல் சென்னையில் விடிய, விடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்மட்டமான 24 அடியில் 21.3 அடி தற்போது நிரம்பியுள்ளது. ஏரிக்கு தற்போது நீர்வரத்து 600 கன அடியாக உள்ளது.

இந்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று பகல் 1.30 மணிக்கு 500 கனஅடி நீர் திறந்துவிடப்பட உள்ளது. இதன் காரணமாக ஏரியை சுற்றியுள்ள நத்தம், குன்றத்தூர், நந்தம்பாக்கம், பூந்தமண்டலம், வழுதம்பேடு, பழந்தமண்டலம், எருமையூர், சிறுகளத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை ஆகிய கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நீர் வரத்தை பொறுத்து படிப்படியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

